பாடல் 8
எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள், தும்பிகாள்,
கனக்கொள் திண் மதிள் புடைசூழ் திருமூழிக்களத்து உறையும்
புனக்கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே.
பெரிய சோலையிலே இரை தேடி உண்டபடி, மனத்துக்கு இன்பம் ஏற்படும்விதமாகத் திரிகிற வண்டினங்களே, தும்பிகளே, கனமான, திண்மையான மதிள் சுவரால் சூழப்பட்ட திருமூழிக்களத்திலே உறைகிற எம்பெருமான், புனத்திலே விளைந்த காயாம்பூவைப்போன்ற திருமேனியைக் கொண்டவர், பூந்துழாயைத் திருமுடியிலே அணிந்தவர், அவரிடம் எனக்காக ஒன்று சொல்லுங்கள்.