பாடல் 10
தகவு அன்று என்று உரையீர்கள், தடம் புனல்வாய் இரைதேர்ந்து
மிகல் இன்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்,
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே.
பெரிய நீர்நிலைகளிலே இரை தேடிக்கொண்டு மிகுந்த இன்பத்தோடு திரியும் மென்மையான நடையைக்கொண்ட அன்னங்களே, எம்பெருமானை எண்ணி என்னுடைய மேனி மிகவும் மெலிகிறது, மேகலையும் கழன்றுவிட்டது, இப்படியே சென்றால் என்னுடைய அகமேனியாகிய ஆன்மாவும் ஒழியக்கூடும், அதற்குமுன்னால், திருமூழிக்களத்திலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடம் சென்று, ‘இவ்வாறு இப்பெண்ணை வருத்துவது உங்களுக்குத் தகுதியானதில்லை’ என்று சொல்லுங்கள்.