பாடல் - 2
நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனைகொள் பூஞ்சோலை தென்காட்கரை என் அப்பா,
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே.
சுனைகள், பூஞ்சோலைகள் நிறைந்த திருக்காட்கரையிலே எழுந்தருளியிருக்கும் எங்கள் தந்தையே, உங்களை நினைக்க நினைக்க, உங்கள் புகழைச் சொல்லச் சொல்ல, என்னுடைய நெஞ்சு இடிந்து கரைகிறது, வினைகளை அழிக்கும் உங்களுடைய சிறப்பைப் பாடினால், என்னுடைய அரிய உயிர் வேகிறது, எம்பெருமானே, உங்களுக்கு நான் எப்படித் தொண்டுகள் புரிவேன்? அதை என்னால் சிந்திக்கமுடியவில்லையே.