பாடல் 3
கூவிக்கொள்ளாய் வந்து, அந்தோ, என் பொல்லாக் கருமாணிக்கமே,
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்,
மேவித் தொழும் பிரமன், சிவன், இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே, உம்பர் அந்த அதுவே.
பொருந்தித் தொழுகின்ற பிரமன், சிவன், இந்திரன் முதலானோருக்கெல்லாம் தொடக்கமாக அமையும் திருநாபிக்கமலத்துக்கு இடமானவனே, வானவர்களுக்கும் அதே தன்மையாக அமைந்தவனே, என்னுடைய உயிருக்கு உன்னைத்தவிர இன்னொரு பற்றுக்கொம்பை நான் அறியேன், எம்பெருமானே, என்னுடைய துளையிடப்படாத கருமாணிக்கமே, இங்கே வந்து என்னைக் கூவிக்கொள்ளமாட்டாயா, அடடா.