பாடல் 1
அருள் பெறு அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான், அது நமது விதிவகையே,
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்,
மருள் ஒழி நீ, மடநெஞ்சே, வாட்டாற்றான் அடி வணங்கே.
எம்பெருமானின் அருளைப் பெறுகின்ற அடியவர்களுக்கு நான் அடியவன். ஆகவே, சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமான் எனக்கும் அருள்செய்கின்றான், அது நம்முடைய விதிவகையாகும், இருளை (அறியாமையை)த் தருகிற இந்தப் பெரிய உலகத்திலே இன்னொருமுறை பிறவியெடுக்க நான் விரும்பவில்லை, அறியாமை நிறைந்த நெஞ்சமே, நீ பலவற்றை யோசித்து மயங்காதே, திருவாட்டாற்றில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருவடிகளை வணங்கு.