பாடல் 2
வாட்டாற்றான் அடி வணங்கி, மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே, கேசவன், எம்பெருமானைப்
பாட்டு ஆய பல பாடிப் பழவினைகள் பற்று அறுத்து,
நாட்டாரோடு இயல்வு ஒழித்து, நாரணனை நண்ணினமே.
அறியாமை நிறைந்த நெஞ்சமே, இதைக் கேள், திருவாட்டாற்றிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருவடிகளை வணங்கினோம், இந்தப் பெரிய உலகத்திலே மீண்டும் பிறவியெடுக்காதபடி நம் பிறவி நோயை அறுக்குமாறு கேட்டோம், கேசவன், எம்பெருமானைப் பல பாசுரங்களால் பாடினோம், பழைய வினைகளாகிய பற்றுகளை அறுத்தோம், இந்த உலகத்தாரோடு பழகுவதைத் தவிர்த்தோம், (அவ்வாறு வழிபட்டதன்மூலம்) அந்த நாராயணனையே நாம் நெருங்கினோம்.