பாடல் 6
தலைமேல தாள் இணைகள், தாமரைக் கண் என் அம்மான்,
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும், எம்பெருமான்,
மலைமாடத்து அரவு அணைமேல் வாட்டாற்றான், மதம் மிக்க
கொலை யானை மருப்பு ஒசித்தான் குரைகழல்கள் குறுகினமே.
தாமரைபோன்ற கண்களையுடைய என் அம்மான், என் நெஞ்சத்திலிருந்து எப்போதும் நிலைபெயராமல் நிலைத்திருப்பவர், எம்பெருமான், மலைபோன்ற மாடங்களையுடைய திருவாட்டாற்றிலே பாம்புப் படுக்கையிலே திருப்பள்ளிகொண்டிருப்பவர், மதம் மிகுந்த, கொல்லக்கூடிய யானையாகிய குவலயாபீடத்தின் கொம்புகளை முறித்தவர், சத்தமிடும் வீரக்கழல்கள் அணிந்த அவருடைய திருப்பாதங்களை நாம் அடைந்தோம், அவருடைய திருவடிகளைத் தலைமேல் சூடிக்கொண்டோம்.