கனவோடு நில்லாமல் - ஜெ.சதக்கத்துல்லாஹ்; பக்.224; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.
மதுரை மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் படித்த சிறுவன் ஒருவன் ஒன்பதாவது படிக்கும்போது தந்தையை இழந்து வாடுவதும், தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதும், தன்னுடன் பிறந்த தம்பிகளின் படிப்பு, எதிர்காலம் ஆகியவற்றுக்காக படிப்பை நிறுத்திவிடலாம் என்று கூட நினைப்பதும், ஆனால் அதே சிறுவன் படித்து, பட்டம் பெற்று இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கான மண்டல இயக்குநராக உயர்ந்ததும் நம்மை நெகிழ வைக்கின்றன. நூலாசிரியரின் வாழ்க்கை வரலாறு என்றபோதிலும் வறுமையிலும், பின்தங்கிய சூழ்நிலையிலும் வாழ்க்கையுடன் போராடி முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரின் இதயத்துடிப்பைப் பிரதிபலிப்பதாகவே இந்நூல் அமைந்திருக்கிறது.
நூலாசிரியர் வாழ்க்கையின் நெருக்கடியான ஒவ்வொரு கட்டங்களிலும் எடுக்கக்கூடிய சரியான முடிவுகள்தாம் அவரை உயர்ந்தநிலைக்குக் கொண்டு சென்றது என்பதை அறிய முடிகிறது.
தன் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து, தான் கற்ற பாடங்களை, எவ்விதம் வாழ்வில் நடந்து கொள்ள வேண்டும் என்று பிறருக்கு நூலின் இறுதிப் பகுதியில் எடுத்துரைக்கிறார்.
வங்கிப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு, வங்கித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாடு முன்னேற என்ன செய்ய வேண்டும்? என்பதையும் விளக்கியிருக்கிறார்.
முன்னேற்றத்துக்கான தடைகள் வரும்போதெல்லாம் கலங்கித் தவிக்கும் ஒவ்வொரும் படித்து தெளிவும், மன உறுதியும் பெற்று சிறகடிக்க இந்நூல் உதவும்.