உடல் உள்ளம் ஆன்மா - ஏ.எம்.ஜேம்ஸ்; பக்.500; ரூ.390; ஓவியா பதிப்பகம், வத்தலகுண்டு; )04543- 262686
உடலும் உள்ளமும் தூய்மையாக இருந்தாலே பரிசுத்தமான ஆன்மாவை உணர முடியும். அந்த இலக்கில் இந்நூலை வாசிக்க ஆரம்பிக்கலாம். பல்வேறு மத நூல்கள், அறிஞர் பெருமக்களின் அறிவுரைகள், இந்துமத ஆன்மிகப் பெரியவர்கள், ஏசுநாதர் போதனைகள், அண்ணல் நபிகள் நாயகத்தின் பொறுமையைப் பறைசாற்றும் கட்டுரை.. இத்துடன் திருக்குறள், பாரதியாரின் அமுத மொழிகளையும் தலைப்புக்கு ஏற்றவாறு கலவையாகத் தந்து வியக்க வைக்கிறார் நூலாசிரியர். சமய நல்லிணக்கத்துக்கான மிகச் சிறந்த நூலாகவும் இது விளங்குகிறது. "அன்பு நடந்தால் அன்னை தெரசா, அன்பு சிரித்தால் அண்ணல் காந்தி'; "ஆன்மாவிற்கோ, உள்ளத்திற்கோ, உடலுக்கோ பலவீனத்தை உண்டு பண்ணும் எதையும் கால் விரலாலும் தீண்டாதே', "பொறுமை என்பது செயலற்ற தன்மை அல்ல, மாறாக அது செயலாற்றும் திறமை, அது ஒருங்கிணைக்கப்பட்ட வலிமை', "பிறரிடம் பிழை காண்பது எளிது, அதை நாம் சிறப்பாகச் செய்து முடிப்பது கடினம்', "தியானம் என்பது இறைவனைக் காண உதவும் கண்' } இவை போன்ற பல வரிகள் சிந்தனைக்கு விருந்தளிக்கும் அறிவுப் பெட்டகமாக இந்நூலை மிளிரச் செய்திருக்கிறது.