தொல்குடி வேளிர் வேந்தர் (பண்டைய தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு) - ர. பூங்குன்றன்; பக்.252; ரூ.200; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044-2625 1968.
"தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. தமிழக அகழாய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளதால்தான் பண்டைய தமிழ்ச் சமூகம் தொடர்பான முழுமையான வரலாற்றுத் தரவுகள், விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை' என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நூலாசிரியர், தம் மனக்குமுறல்களை இந்நூலின் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறார் - வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறலாம். அந்த வகையில், தொல்குடி வேந்தர் வேளிர் தொடர்பான வரலாற்று உண்மைகள் பல, இந்நூலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தொல்குடிகள், வேளிர், வேந்தர், நாடும் அரசியலும், நகரம், எழுத்தறிவாக்கமும் சமூக உருவாக்கமும் ஆகிய ஆறு தலைப்புகளில் தொல் பழங்குடிகள் தொடங்கி வேந்தர் எழுச்சி வரை அக்கால அரசியல் மற்றும் சமூகப் போக்குகளை இந்நூல் விரித்துரைக்கிறது. குறிப்பாக வேந்தர் - தொல்குடிகள் உறவு பற்றியும், வேந்தர் வேளிர் உறவு பற்றியும் விரித்துரைக்கிறது.
பழந்தமிழகத்தில் இருந்த நகரங்கள், வளர்ச்சி, அவ்வளர்ச்சியில் எழுத்தின் பயன்பாடு பெறும்
முக்கிய பங்கு, பிராமி எழுத்து, பழந்தமிழ் எழுத்துகளின் தொடர்பு, தொல்குடியினரின் வாழ்வியல் முறைகள், பாண்டிய நாட்டு வேளிர், கொங்கத்து வேளிர், பழங்கால நிலப்பொதுவுடைமை முறை, பண்டைய நகரங்கள், பானைப் பொறிப்புகள், தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் முதலியவை விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
வரலாற்றுத்துறைக்கு "வேளிர் வேந்தர்' தொடர்பாகக் கிடைத்துள்ள மிகச்சிறந்த வரலாற்றுப் பதிவு இந்நூல்.