பாலி முதல் மியன்மார் வரை - மாத்தளை சோமு; பக்.280; ரூ.180; தமிழ்க்குரல் பதிப்பகம், 5/பி-15, ஐந்தாவது பிரதான சாலை, ஞானம் காலனி, ராமலிங்க நகர், உறையூர், திருச்சி-620003.
தமிழில் பயண இலக்கியத்தை சுவாரசியமான முறையில் எழுதுபவர்கள் குறைவு.
பாலி முதல் மியன்மார் வரையிலான நூலாசிரியரின் பயண அனுபவங்கள் இந்
நூலில் சுவையாகப் பதிவாகியிருக்கின்றன.
பண்டைய காலத்திலேயே நமது பண்பாடு, மதம் கடல் கடந்து சென்ற நாடுகளில் பாலித்தீவு, தாய்லாந்து, பர்மா, கம்போடியா ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.
பாலித்தீவிலும், தாய்லாந்திலும் சாதிப் பிரிவுகள் உள்ளன; ஆனால் அங்கு சாதி மோதல்கள் இல்லை. கோயில்கள் அந்த நாடுகளில் இன்றும் பாரம்பரிய சின்னங்களாகப் பராமரிக்கப்படுதல், தாய்லாந்து மன்னர்களின் பதவியேற்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றுக்கு மரியாதை அளிக்கப்படுவது போன்ற பல்வேறு தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வோர் இடத்தையும் அதன் வரலாற்றோடு தொடர்புபடுத்தி எழுதியிருக்கிறார்.
இடங்களைப் பற்றி நூலாசிரியர் விவரிக்கும்முறை அந்த இடங்களுக்கு நாமே நேரில் சென்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது. இந்நூல், வெறும் சுற்றுலா கையேடு அல்ல; வரலாற்றுக் கண்ணாடி.