நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -1986 - என். முத்து விஜயன்; பக்-240; ரூ.150; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை 15; 044 - 2489 0151.
உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாகவும் நுகர்வில் முதலிடமும் வகிக்கும் நாடு அமெரிக்கா. அங்கு அடிக்கடி கூறப்படும் வாக்கியம் - கஸ்டமர் இஸ் கிங்- அதாவது, வாடிக்கையாளரே மன்னர். நம் நாட்டில் அதற்கு நேர் எதிர். "நீங்கள் இல்லாவிட்டால் இன்னொரு வாடிக்கையாளர்' என்று ஒவ்வொரு வாடிக்கையாளரையும் துச்சமாகக் கருதும் போக்குதான் இங்கு பெரும்பாலும் உள்ளது.
நுகர்வோர் சோர்வடைந்தாலும், அவர்களின் நலனைக் காக்க அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. வாடிக்கையாளரின் நியாயமான புகாருக்கு இழப்பீடு கிடைக்கச் செய்யும் சட்ட ரீதியான வழி முறை இருக்கிறது. அதனை விளக்குவதுதான் இந்தப் புத்தகம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -1986, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், இன்றியமையாப் பொருட்கள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை முழுமையாக விவரிக்கிறது. பல்வேறு அரசுத் துறைகளில் நுகர்வோர் புகார் மையங்கள், மாவட்டந்தோறும் செயல்படும் நுகர்வோர் நலன் அமைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. உணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தை நாமே கண்டுபிடிக்க உதவும் வழிமுறைகள், தகுதி வாய்ந்த பரிசோதனைக் கூடங்களின் விவரங்கள் உள்ளன. நுகர்வோர் சங்கம் எப்படித் தொடங்குவது என இந்நூல் விளக்குகிறது.
இதில் சுவாரசியமான பகுதி, ரயிலில் பயணியை எலி கடித்தது முதல் வாகன விபத்து இழப்பீடு, மருத்துவ சேவை குறைபாடு வரையிலான ஏராளமான நுகர்வோர் புகார்கள் எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டன என்பன போன்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு நம்மை ஊக்கப்படுத்துவதற்காகத் தரப்பட்டுள்ளது. பயனுள்ள புத்தகம்.