சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள் - அரங்க.இராமலிங்கம்; பக்.269; ரூ.150; வர்த்தமானன் பதிப்பகம், சென்னை-17; )044-2814 4995.
சென்னைப் பல்கலைக்கழகம், 159 ஆண்டுகள் பழைமையும் சிறப்பும் உடையது. 2014இல் "தமிழ்த் துறையின் தனிப்பெரும் சுடர்கள்' எனும் தலைப்பில் நடந்த தேசியக் கருந்தரங்கில் வாசிக்கப்பட்ட துறைத் தலைவர், பேராசிரியர்கள் பலரின் அருமை பெருமைகள் குறித்த கட்டுரைகள் "சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள்' என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் தலைவர்களாக இருந்தவர்கள், திருக்குறள் ஆய்வு மையத்தின் பொறுப்பில் இருந்தவர்கள், ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சிய அகராதித் திட்டக் குழுவில் பணியாற்றியவர்கள், கிறித்துவத் தமிழ் இலக்கிய இருக்கையில் பணியாற்றிய சு. அனவரதவிநாயகம் பிள்ளை, கே.என். சிவராசப்பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை உள்ளிட்ட பதினாறு தமிழறிஞர்களின் - தமிழ் ஆளுமைகளின் வாழ்க்கையையும் அவர்தம் ஆய்வுப் பணிகளையும் தொகுத்துரைக்கிறது இந்நூல்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியோரில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வ., க.த.திருநாவுக்கரசு ஆகிய மூவர், தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை எழுதிய பெருமக்கள் அறுவர், தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ்த்துறை ஆசிரியர்கள், சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகள், தமிழ் மொழித்துறை பேராசிரியர்கள், தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர்கள் எனப் பலவும் ஆண்டுகளோடு பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன. மிகச்சிறந்த வரலாற்றுப் பதிவு.