நீ பாதி நான் பாதி - மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள் - தொகுப்பு: அந்திமழை ஆசிரியர் குழு; பக்.128; ரூ.110 ; அந்திமழை, சென்னை-117; 044 -- 2377 4541.
"அந்தி மழை' மாத இதழில் ஆண்- பெண் உறவு, மண வாழ்க்கை தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள், நேர்காணல்கள், தகவல்கள், சமூக ஊடகங்களினால் ஏற்படும் ஆண்- பெண் உறவு பாதிப்புகள் மற்றும் நன்மைகள் பற்றி வந்த கருத்துகள் எல்லாம் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, நடிகர் சிவகுமார், சாலமன் பாப்பையா, சகாயம் ஐ.ஏ.எஸ்., டாக்டர் நாராயண ரெட்டி, கலாப்ரியா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கூறிய இல்வாழ்க்கை தொடர்பான கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
ஆண்களின் சாதனைகளுக்குப் பின்னே பெண்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன ஆர்.நல்லகண்ணு, நடிகர் சிவகுமார், சகாயம் ஐ.ஏ.எஸ். ஆகியோரின் கருத்துகள்.
டாக்டர் நாராயண ரெட்டியின் நேர்காணல்களில் போர்னோ கிராபி பற்றியும், ஆண் - பெண் உறவு தொடர்பான உடல், மனப் பிரச்னைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.
இன்றைய நவீன உலகில் ஆண் - பெண் உறவு எந்நிலையில் உள்ளது? மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பழைய வாழ்க்கை மதிப்பீடுகள் எந்த அளவுக்குப் பொருந்தும்? இல்வாழ்க்கையில் வரக் கூடிய பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது? சமூக ஊடகங்களில் ஏற்றுக் கொள்ள வேண்டியவை எவை? தள்ள வேண்டியவை எவை? என்பன பற்றியெல்லாம் தெளிவான கருத்துகளை வாசகர்கள் வந்தடைய இந்நூல் உதவும்.