திரைக்கதை (விரிவாக்கப் பதிப்பு) - தர்மா; பக்.320; ரூ.200; ரம்யா பதிப்பகம், சென்னை-17; )044-2436 1141.
கன்னடத் திரையுலகில் நீண்டகால அனுபவம் உள்ள ஒரு தயாரிப்பாளரால் தமிழில் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது இந்த நூல். "நம்மவள்' என்ற கதையை எழுதி, அதை முழுத் திரைக்கதையாக்கித் தந்திருக்கும் முயற்சி புதியது; பாராட்டுக்குரியது.
இன்று செல்லிடப்பேசி கேமராவில் குறும்படம் எடுத்தே பலரும் திரைக்கலையைக் கற்றுக் கொள்கிறார்கள். தனியார் திரைப்படக் கல்லூரிகளும் ஏராளம் உள்ளன. திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை அனுபவப்பூர்வமாக விவரிக்கும் இந்த நூல், மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பயன்படும். ஒரு திரைப்படத்துக்கு எத்தனை காட்சிகள் தேவை? வசனங்கள் எப்படி இருக்க வேண்டும்? கேரக்டரை எப்படி அமைப்பது? ஒன்லைன் எப்படி எழுதுவது? லொகேஷன், லைட்டிங், காட்சிக்குப் பொருத்தமான கேமரா ஆங்கிள், ஷாட், டேக், ட்ரீட்மென்ட், டைமிங் என அக்குவேறு ஆணிவேறாக சினிமாவை அலசுகிறார் நூலாசிரியர். 87 காட்சிகளைக் கொண்ட ஒரு திரைக்கதையை முழுமையாகத் தந்திருக்கிறார். ஒரே பேப்பரில் (ஏ3 சைஸில்) மொத்த ஒன்லைனையும் பாக்ஸ் போட்டுத் தந்திருக்கும் யோசனை, திரைப்பட உதவி இயக்குநர்களுக்கு மிகவும் பயன்படும்.