திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - ச.சு.இளங்கோ; பக்.418; ரூ.315; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; 044- 2624 1288.
மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள இந்நூல், பாரதிதாசன் வாழ்ந்த காலத்தின் சமூக, அரசியல், பண்பாட்டுத் தாக்கங்கள் அவருடைய படைப்புகளில் எவ்வாறு பிரதிபலித்தன என்பதை ஆராய்கிறது.
பாரதிதாசனின் கருத்துகள் உருவாக எம்மாதிரியான சூழ்நிலைகள் காரணமாக இருந்தன என்பதை ஆராயும் இந்நூல், அவர் காலத்தின் சாதி, சமயம், மூடநம்பிக்கைகள், பிற மொழிகளின் ஆதிக்கம், தொழிலாளர் இயக்கங்கள், பொதுவுடமைக் கருத்துகள், பெண்ணுரிமை கருத்துகள், இன உணர்வு ஆகியவை பற்றிய விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. அவற்றின் தொடர்ச்சியான சமகால அரசியல், பண்பாட்டுச் சூழல்களைப் புரிந்து கொள்ள அந்த தகவல்கள் உதவுகின்றன.
பாரதிதாசன் ஆன்மிகச் சிந்தனையில் மூழ்கியிருந்தது, தேசிய இயக்கச் சிந்தனைகளின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது, சமுதாயச் சீர்திருத்த சிந்தனைகளுக்கு மாறி வந்தது, இறைமறுப்புக் கண்ணோட்டம், தனித்தமிழ் நிலை என அவருடைய மாறிவந்த சிந்தனைப் போக்குகளை மூன்றாம் இயல் ஆராய்கிறது. பாரதிதாசனின் படைப்புகளைப் பற்றியும், அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் நூல்.