கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும் - ஜே.அருள்தாசன் ;
பக்.360 ; ரூ.250; மெல்சி ஜேசைய்யா பதிப்பகம், 14 - ஏ, சங்கம் காலனி இரண்டாவது தெரு, காமராஜர் சாலை, கொட்டிவாக்கம், சென்னை-41 .
சென்னைப் பல்கலைக்
கழகத்தின் முனைவர் பட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ஆய்வேடு நூல் வடிவம் பெற்றிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 45 கடலோர மீனவர் கிராமங்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஊரின் இருப்பிடம், ஊருக்கு அந்தப் பெயர் வரக் காரணம், மக்கள் தொகை, சாதிகள், மக்கள் சார்ந்துள்ள சமயங்கள், ஊரின் சுற்றுப்புறங்களில் உள்ள சிறப்பான இடங்கள், அந்த ஊரில் நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வுகள் என ஒவ்வொரு ஊரைப் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
மீனவர்களின் பேச்சு வழக்கில் உள்ள கலைச்சொற்கள் சுவைபடத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, விலாங்கு என்பது ஒரு மீன் வகை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் மீனவர்கள் தூண்டில் கயிறையும் விலாங்கு என்றே குறிப்பிடுகின்றனர்.
மீனவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள சடங்குகள், அவர்கள் உண்ணும் உணவுகள், நம்பிக்கைகள், கல்வி, திருமணம், பெண்களின் நிலை , விளையாட்டுகள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து நூலாசிரியர் எழுதியுள்ளார்.
மாற்றங்களின் காரணமாக, பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை வருங்காலத் தலைமுறை மறந்துவிடாமல் இருக்க அவற்றைப் பற்றிய செய்திகளை இந்நூல் ஆவணப்படுத்தியுள்ளது.