தமிழ் திரைப்பட நூற்றாண்டு - 2018 - பெ.வேல்முருகன்; பக்.104; ரூ.100; ஒளிக்கற்றை வெளியீட்டகம், 9/2, காஞ்சிரம் பொற்றை, பனங்காலை, களியக்காவிளை, கன்னியாகுமரி மாவட்டம்-629153
தமிழில் முதல் திரைப்படமான "கீசக வதம்' கீசக வதம் வெளியான ஆண்டு 1918 என்பதைக் கணக்கில் கொண்டு, 2018-ஆம் ஆண்டுதான் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டாகத் தீர்மானித்து, இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி வணிகம் செய்து வந்த நடராஜ முதலியார், 1917-இல் புரசைவாக்கத்தில் "இந்தியா பிலிம் கம்பெனி' என்ற தென்னகத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியது, ஒளிப்பதிவு விளக்குகள் இல்லாத நிலையில் சூரிய ஒளியைப் பயன்படுத்தும் விதமாகத் தளம் அமைத்தது, கீசக வதம் தமிழ்நாட்டில் வெளியான பிறகு, அன்றைய ஒருங்கிணைந்த இந்தியா முழுவதும் (பாகிஸ்தான் உள்பட) படத்தை வெளியிட விரும்பிய நடராஜ முதலியார், கதை சொல் அட்டைகளை காந்திஜியின் மகன் தேவதாஸ் காந்தியைக் கொண்டு ஹிந்தியில் மொழி பெயர்த்து வெளியிட்டது; அதைத் தொடர்ந்து அவர் எடுத்த மற்ற திரைப்படங்கள் என நடராஜ முதலியார் பற்றிய தகவல்கள் நிரம்பி வழிகின்றன.
அதேபோன்று, மலையாளத் திரையுலகுக்கு வித்திட்ட தமிழர்கள் ஜே.சி.டேனியல், ஆர்.சுந்தர்ராஜ், தேவகி பாய், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் பற்றிய செய்திகள், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட 107 மௌனப் படங்களின் பட்டியல் ஆகியவை தரப்பட்டுள்ளன. திரை ஆர்வலர்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.