jk பார்வைகள் பதிவுகள்
jk பார்வைகள் பதிவுகள் - தொகுப்பாசிரியர்: கோ.எழில்முத்து; பக்.240; ரூ.150; வேமன் பதிப்பகம், சென்னை-34; )044 - 2821 1134.
மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றிய அற்புதமான பதிவு இந்நூல்.
ஜெயகாந்தனின் நேர்காணல்கள், நமது பண்பாடு, நமது சமயம், குடும்பம் குறித்து ஜெயகாந்தனின் சிந்தனைகள் என மறைந்த அந்த எழுத்தாளரின் நேரடியான பதிவுகள் ஒருபுறம் என்றால், ஜெயகாந்தனைப் பற்றி தமிழின் பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் இன்னொருபுறத்தில் பதிவாகியுள்ளன.
ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
கடலூரில் முருகேசனாக இருந்த ஜெயகாந்தன், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்; ஆனால் "கண்டதும் கற்று' பண்டிதனானவர். மார்க்சியவாதியாக முகிழ்த்து பின்னர் தேசியவாதியாக மலர்ந்தவர்.
மளிகைக்கடை பையன், மாவு மிஷின் வேலை, மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டர் வாசலில் "வேலைக்காரி' சினிமா பாட்டுப் புத்தகம் விற்பவர், கம்பாசிடர், அச்சகத்தொழிலாளி என பல வேலைகளைச் செய்த ஜெயகாந்தன், பலவிதமான மனிதர்களுடன் பழகியவர். அதனால்தான் அவருடைய சிறுகதைகளில் உயிருள்ள மனிதர்கள் உலா வந்தார்கள். அந்த அனுபவங்களின் அடிப்படையில் "சினிமாவுக்குப் போன சித்தாளு'வைப் பற்றி எழுத முடிந்த அவரால், "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவலையும் எழுத முடிந்தது.
எல்லாரும் யோசிக்கும்விதத்தில் இருந்து மாறுபட்டு யோசித்த ஜெயகாந்தன், அப்படிச் சிந்தித்ததாலேயே பல்லாயிரக்கணக்கானோரைக் கவர்ந்தார். அதேபோல் விமர்சனத்துக்கும் உள்ளானார். ஜெயகாந்தன் என்ற மாமனிதனைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் சிறந்த தொகுப்பு இந்நூல்.