இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்) - தொகுப்பாசிரியர்கள் : சு.சந்திரா, ரா.கவிதா, த.சுதந்திரமணி; பக்.1208; ரூ.900; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை - 14; )044- 2848 2441.
மதுரையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
தமிழ்த்துறை சார்பில் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை இரு தொகுப்பு நூல்களாக்கி வெளியிட்டுள்ளனர்.
கற்காலம் முதல் தற்காலம் வரை மதுரையின் வரலாறு, கலை, பண்பாடு, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
முதல் தொகுப்பில் "வரலாற்றுச் சிறப்பில் மதுரை' எனத் தொடங்கும் கட்டுரை முதல் "ஈவாரைக் கொண்டாடும் நான்மாடக்கூடல் வரை' அனைத்திலும் மதுரை அமைப்பு, சிறப்பு என குறிப்பிட்ட தகவல்கள் திரும்பத் திரும்ப வருவது சலிப்படைய வைக்கின்றன.
"மதுரைக் கலம்பகம் காட்டும் மதுரையின் தொன்மையும் வளமையும்', "மதுரையின் வனப்பும் வளமும்' ஆகிய இலக்கிய செறிவுக்கட்டுரைகளுக்கு நடுவே "திரையிசைப் பாடல்களில் மதுரை' என்பன போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம். அதே சமயத்தில் "இன்றைய திரைப்படத்தில் மதுரை' எனும் கட்டுரை வர்த்தக நோக்கில் திரைத்துறையில் மதுரையின் மாண்பு தவறாகச் சித்திரித்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையிலான தகவல்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டித்துரைத் தேவர் தோற்றுவித்த தமிழ்ச்சங்கம் பெயர் மாற்றம், உலகத் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட தற்காலத் தகவல்கள் விளக்கமாக கட்டுரைகளில் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது.