பெரியபுராணக் கதைகள் - ஆதிரையார்; பக்.232; ரூ.150; குமரன் பதிப்பகம், சென்னை-17; )044-2435 3742.
சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த "திருத்தொண்டர் புராணம்' சிவனடியார்களான 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் வரலாறுகளை விரித்துரைக்கும் புராணம். அதனால், அது பெரியபுராணமாயிற்று.
சிவனடியார்களின் பெருமைகள், வரலாறுகள் மட்டும் இதில் கூறப்படவில்லை. மனித நேயம், உயிர்களிடத்தில் அன்பு, அன்னதானத்தின் சிறப்பு, சிவத்தொண்டின் மகிமை, திருநீற்றின் மேன்மை, அடியார்க்கு இரங்கும் பரமனின் எளிவந்த தன்மை, அம்மையப்பரின் கருணை, அறவுரைகள், மன்னர்களின் ஆட்சிமுறை, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், பண்பாடு, கோயிற்கலைகள், வாணிகம், பொருளாதாரம், பழக்க வழக்கங்கள் முதலிய தமிழர் பண்பாடுகளையும் மரபுகளையும் கூறும் ஓர் அரிய வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது.
72 சிவனடியார்களின் பெருமை பேசும் இந்நூல், அவர்கள் வரலாற்றை எளிமையாகவும், சிலரை ஓவியங்களுடன் தந்திருப்பதும் சிறப்பு என்றாலும் பிழைகள் மலிந்துள்ளன. திருஞானசம்பந்தர் வரலாற்றில் "வேதநெறி தழைத்தோங்க' என்ற முதல் பாடலிலேயே மூன்று பிழைகள். "மிகுசைவ' என்பது "மிகுசைல' என்றும்; "மலர்ந்தழுத' என்பது "மலர்ந்தமுத' என்றும்; "சீதவள' என்பது, "சீதவட' என்றும் பொருள் மாறுபட உள்ளன. அதுமட்டுமல்ல, "தோடுடைய செவியன்' பதிகத்தின் இரண்டாவது வரி "காடுடைய சுடலை' (சுடலை-சுடுகாடு) என்பது "காடுடைய கடலை' (கடலை- வேர்க்கடலை, கடல்) என்றுள்ளது.
இவ்வாறு நூல் முழுக்க பிழைகள் மலிந்துள்ளன. இவற்றை அடுத்த பதிப்பிலாவது திருத்திப் பதிப்பித்தால் இந்நூல் நல்ல மணம் பெறும்.