தமிழ் அறஇலக்கியங்களும் பெளத்த சமண அறங்களும் - சு.மாதவன்; பக்.310; ரூ.250; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை-98; )044 - 2625 1968.
முனைவர் பட்ட ஆய்வேடு நூல் வடிவம் பெற்றுள்ளது. வைதீக, பெளத்த, சமணத் தத்துவங்களைப் பற்றிய விரிவான அறிமுகமாக இந்நூல் உள்ளது.
திருக்குறள், நாலடியார், பழமொழி, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஆசாரக் கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக்காஞ்சி உள்ளிட்ட பல பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அறநெறிகள் இந்த மூன்று தத்துவங்களுடன் எந்த அளவுக்கு இயைந்தும், முரண்பட்டும் போகின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது.
உயிர், உலகம், இறைவன், விதி நான்குக்குமான உறவுநிலை, அதில் இறைவன் வகிக்கும் முதன்மை இயங்குநிலை ஆகியவற்றை வைதீகத் தத்துவங்கள், ஆராய்ந்து கொண்டிருந்த காலத்தில் , உயிர், உலகம், வாழ்க்கை ஆகியவற்றுக்கான உறவு, இயங்கும்தன்மை ஆகியவற்றை பெளத்தமும், சமணமும் ஆராய்ந்தன. எனினும் துறவற நெறிக்கே முதன்மையிடம் அளித்தன. ஆனால் தமிழ் அற இலக்கியங்களோ, இல்லறநெறிக்கும், சமூக வாழ்வியலுக்கும் முதன்மையிடம் அளித்தன. அதனால்தான் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவை மட்டும் இடம் பெறாமல் காமத்துப்பாலும் இடம் பெற்றது.
மனிதன், அரசு, சமயம் ஆகிய அனைத்து சமூக நிறுவனங்களும் பின்பற்றுதவதற்கான நெறிகளை தமிழ் அற இலக்கியங்கள் தந்திருக்கின்றன என்கிறார் நூலாசிரியர்.
மனித சமூகத்தில் ஏற்படும் பல்வேறு மாறுதல்களை, வளர்ச்சிகளை அறிவியல் பின்புலத்துடன் நூலாசிரியர் ஆராய்ந்து, அதனடிப்படையில் வரலாற்றையும், மெய்யியல்களையும் அற இலக்கியங்களையும் விளக்கியிருப்பது சிறப்பு.