வெளிச்சத்தை நோக்கி - உதயை மு.வீரையன்; பக்.160; ரூ.140; மேன்மை வெளியீடு, சென்னை-14; 044 - 2847 2058.
மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட பார்வையுடன் நம்நாட்டிலும், உலக அளவிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்து நூலாசிரியர் எழுதிய 30 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என்கிற பெயரில் மக்களை வெளியேற்றுவது, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, பெட்ரோல் விலையை அதிகப்படுத்திக் கொண்டே போவது, நிலம் கையகப்படுத்தும் சட்டம், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது உள்ளிட்ட பல பிரச்னைகளைப் பற்றி நூலாசிரியரின் குரல்கள் இக்கட்டுரைகளில் ஒலிக்கின்றன.
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது, சிறைப்பிடிக்கப்படுவது, சந்தனக்கடத்தல் வீரப்பனை வேட்டையாடும்போது பழங்குடியின மக்கள் தாக்கப்பட்டது போன்றவற்றையும் நூலாசிரியர் கண்டிக்கத் தவறவில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மதுவிலக்கு, கருத்துச் சுதந்திரம் ஆகியவை எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் கட்டுரைகளும் உள்ளன. மிகுந்த சமூக அக்கறையோடு மக்களின் பக்கம் நின்று நூலாசிரியர் எழுப்பும் குரல்கள், இந்நூலில் உள்ள கட்டுரைகளில் உரத்து ஒலிக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் எப்போது எழுதப்பட்டது என்பதைக் குறிப்பிட்டிருந்தால், சமகால அரசியலைப் புரிந்து கொள்ள அது மேலும் உதவியிருக்கும்.