வையாபுரியாரின் கால ஆராய்ச்சி - அ.கா.பெருமாள்; பக்.140; ரூ.150; காவ்யா, சென்னை-24; )044-2372 6882.
"எஸ்.வி.' என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆராய்ச்சி அறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆராய்ச்சி உலகில் பலருடைய விமர்சனங்களையும் எதிர்கொண்டவர். அவரைப் பலரும் விமர்சித்ததற்கு திருவள்ளுவர், மாணிக்கவாசகர் குறித்த கால ஆராய்ச்சியே முதன்மையான காரணம் என்றும் சொல்லப்படுகிறது. கண்மூடித்தனமாக முந்தைய மரபை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தாம் கண்ட ஆராய்ச்சி முடிவுகளை - உண்மைகளைச் சொல்லத் தயங்காதவர் எஸ்.வி.
எட்டுத்தொகை நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், நிகண்டுகள், புராணங்கள், இதிகாசங்கள் என எஸ்.வி. செய்த 50க்கும் மேற்பட்ட இலக்கியங்களின் கால ஆராய்ச்சிக் குறிப்புகள் இந்நூலில் உள்ளன.
சிலப்பதிகாரம் கூறும் பஃறுளியாறு கதை கற்பனையானது என்று கூறி, வடமொழிச் சொற்களைக் கொண்டும், வழக்காறு கதைகளைக் கொண்டும் சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கணித்திருக்கிறார். மேலும், "முச்சங்கங்கள் குறித்த செய்திகளும், தமிழகத்தில் ஏற்பட்ட கடல்கோள் பற்றிய செய்திகளும் கற்பனையானவை' என்கிறார்.
திருவள்ளுவரின் காலத்தைக் கணிக்க திருக்குறளில் இடம்பெறும் வடமொழிச்சொற்கள், இலக்கண வழக்காறுகளைக் கொண்டு அவர் கி.பி. 600 இல் வாழ்ந்தவர் என்கிறார்.
ஒரு நூலின் காலத்தை ஆராய்வது என்ற நோக்கில் திட்டமிட்டு அதைப் பற்றி நூலோ, கட்டுரையோ எழுதியவரல்லர் எஸ். வையாபுரிப்பிள்ளை. அவர் எழுதிய வேறு வேறு கட்டுரைகளில், வேறு வேறு நூல்களில், நூல்களின் காலம் பற்றி எழுதப்பட்டுள்ள ஆராய்ச்சிக் குறிப்புகளின் அடிப்படையில் எஸ்.வி.யின் கால ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தை இந்நூல் சுருக்கமாக எடுத்துரைக்கிறது.