ரூபாய் நோட்டுக்கள் தடை - எஸ். குருமூர்த்தி; பக். 160; ரூ. 120; அல்லயன்ஸ் வெளியீடு, சென்னை 4; 044- 2464 1314 .
இந்த நூலின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி நாடறிந்த பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமாவார். நாட்டின் முக்கிய பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதி வருகிறார். நாட்டையே உலுக்கிய உயர் மதிப்பு கரன்சி மதிப்பிழப்பு குறித்து எஸ். குருமூர்த்தி எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். மேலும் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பைத் தொடர்ந்து ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டிகளின் தமிழாக்கமும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவ.8-ஆம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கரன்சிகளின் எண்ணிக்கை மொத்த கரன்சி புழக்கத்தில் 86 சதவீதம் என்ற நிலையில், அவை மதிப்பிழந்துவிட்டதாக அரசு அறிவித்தபோது எழுந்த பூமிக்குலுக்கத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம். அந்த நடவடிக்கை மூலம், எவ்வாறு கருப்புப் பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டது, தீவிரவாத , பயங்கரவாத நடவடிக்கைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டன என்பதை விளக்குகிறார்.
மேலும், கரன்சி மதிப்பிழப்பால் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றங்களும் விளக்கப்பட்டுள்ளன. கரன்சி மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எழுந்த அரசியல் எதிர்ப்பானது, நாட்டின் முக்கிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி அடைந்த பிறகு அடங்கிவிட்டதும் சுட்டிக் காட்டப்படுகிறது.
பொருளாதார விவகாரங்கள் என்றாலும் அனைவரையும் பாதிக்கக் கூடிய இந்த முக்கிய விவகாரம் குறித்து, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.