யுகப் புரட்சி - அமரர் கல்கி; பக்.232; ரூ.140; வானதி பதிப்பகம், சென்னை-17; 044 - 2434 2810.
அமரர் கல்கி 1931 -39 காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாராஷ்டிர மாநிலம் பெயிஸ்பூர் கிராமத்தில் 1937 இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டைப் பற்றிய கட்டுரை, அம்மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மாநாட்டுக்குச் சென்றவர்கள் தங்கிய இடம், குளிக்க செய்திருந்த ஏற்பாடுகள், மின்சாரம் இல்லாத அந்த ஊரில் இரவு நேரத்தில் எரியவிடப்பட்ட விளக்குகள், அளிக்கப்பட்ட உணவு என அனைத்தையும் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கிறது. 1937-ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இராஜாஜி இருந்தபோது, சேலம் ஜில்லாவில் கள்ளுக்கடைகள் தடை செய்யப்பட்டன. அந்தத் தடையை சேலம் ஜில்லா மக்கள் எந்த அளவுக்கு வரவேற்றனர் என்பதை மக்களின் மொழியிலேயே சொல்லும் "யுகப்புரட்சிகள் இரண்டு' கட்டுரை, "அரசியல் ஞானி அரங்கசாமி ஐயங்கார்' என்ற நூலைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரையான "பெயர் பெற்ற பத்திரிகாசிரியர்', கட்டுரை சோவியத் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சோசலிஷ பொருளாதாரச் செயல்பாடுகளைப் புகழும் "பிளான் என்ன, பிளான்?' என்ற கட்டுரை, காந்திஜியின் அகிம்சைப் போராட்ட முறையைப் பற்றிக் கூறும் " இவரே ராஜரிஷி! இவரே ராஜதந்திரி' கட்டுரை, திரைப்படங்களின் தீய விளைவுளைப் பற்றி விவரிக்கும் "மந்திரிகளும் டாக்கியும்' கட்டுரை என இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும், எவ்வளவு ஆழமான பிரச்னைகளைப் பற்றியும் நகைச்சுவை ததும்ப மிக எளிமையாக, சுவையாக எழுத முடியும் என்பதற்கு சாட்சிகளாக உள்ளன.