ஈழ இலக்கியம்

ஈழ இலக்கியம் - ஒரு விமர்சனப் பார்வை- ஜெயமோகன் ; பக்.176 ; ரூ.155; கிழக்கு பதிப்பகம், சென்னை-14 ; 044 - 4200 9603.
ஈழ இலக்கியம்

ஈழ இலக்கியம் - ஒரு விமர்சனப் பார்வை- ஜெயமோகன் ; பக்.176 ; ரூ.155; கிழக்கு பதிப்பகம், சென்னை-14 ; 044 - 4200 9603.
ஈழ இலக்கியத்தை அறிமுகம் செய்தவர் பத்மநாப அய்யர். அதன் பின்னர் ஈழ இலக்கியத்தை ஈழப்போர் வழியாகவே அறிய நேர்ந்தது. ஈழப்போர் வழியாகவே ஈழ இலக்கியம் சார்ந்த இதழ்கள் உருவாகின. அவையே ஈழ இலக்கியம் பரவலாக அறிமுகமாக வழி வகுத்தது. 
ஈழத்தின் இலக்கியச் சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி படைப்புகளின் வழியாகவும், சிறுகதையை அ.முத்துலிங்கம் படைப்புகளின் வழியாகவும், கவிதைகளை வில்வரத்தினம், சேரன் படைப்புகளின் வழியாகவும் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். 
தத்துவத்தின் விளிம்பில் மெய்யியலில் சஞ்சரிப்பவர் தளையசிங்கம். ஒரு முற்போக்காளராக இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய பின் அத்தத்துவத்தின் போதாமைகளை உணர்ந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தவர். விவாத அம்சத்தை பெரிதும் வலியுறுத்துபவர்.
ஈழ இலக்கியத் திறனாய்வாளர்களில் கைலாசபதி, சிவத்தம்பி இருவருக்கும் உள்ள இடம் முக்கியமானது. இலக்கியக் கோட்பாட்டாளரான சிவத்தம்பியின் அடிப்படை நோக்கு மார்க்சிய இயங்கியலே. 
எஸ்.பொன்னுதுரையின் கதைகள் மிகையுணர்ச்சியும், அலங்கார நடையும் கொண்டவை. இவரின் பெரும்பான்மையான கதைகள் காமத்தைச் சுற்றி இயங்கும் மன ஓட்டங்களைச் சித்திரிப்பவை. முத்துலிங்கத்தின் படைப்புலகில் அவரது அங்கதம் முக்கியமானது. 
வில்வரத்தினம் கவிதைகளின் சிறப்பியல்பு அவை தங்கள் சந்தத்தை உண்மையான உணர்ச்சியிலிருந்து பெற்று அதை வாசகனில் நிலை நாட்டும் பொருட்டு கவிதையில் ஒலிக்க விடுவதே. "புரட்சி, காதல் கவிதைகளை தொடக்க காலம் முதலே சேரன் மாறி மாறி எழுதியிருக்கிறார். பாரதிக்குப் பிறகு, தமிழில் புரட்சிக் கவிதைகளை எழுதியவராக அவரை அடையாளப்படுத்த விரும்புகிறேன்' என்கிறார் நூலாசிரியர். இந்த நூல், நூலாசிரியரை ஒரு விமர்சகராகவும் வாசகர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com