பத்துப் பாட்டினில் ஆளுமை வளர்ச்சி - கெ.இரவி; பக்.280; ரூ.200; நிலாசூரியன் பதிப்பகம்; 27/2, தெற்கு சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை-24.
ஏதேனும் ஓர் இலக்கை எடுத்துரைப்பது "இலக்கியம்' எனப்படும். மனித உள்ளத்தின் தன்மைகளை எடுத்துரைப்பது "உளவியல்' எனப்படும். ஆளுமை என்பதை, ஆங்கிலத்தில் "பர்சனாலிட்டி' என்று கூறுவர். இது, தனி மனிதனது உடல் தோற்றம், பேசுவது, உடுப்பது, பழகுவது, அறிவாற்றல், குணங்கள், பண்புகள் முதலியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இம்மூன்றையும் விரிவாக விளக்குகிறது இந்நூல்.
"சங்க இலக்கியங்களை உளவியல் இலக்கியம்' என்கிறார் தமிழண்ணல். அந்த வகையில் இலக்கியமும் உளவியலும் நெருங்கிய தொடர்புடையவை. இலக்கியத்தில் உள்ள ஆளுமை வளர்ச்சி, உளவியல் தன்மை போன்றவற்றை இந்நூல் விரித்துரைக்கிறது. குறிப்பாக, பத்துப்பாட்டில் உள்ள இலக்கியங்களை எழுதிய நக்கீரர், முடத்தாமக்கண்ணியார், நத்தத்தனார், உருத்திரங்கண்ணனார், நப்பூதனார், மாங்குடி மருதனார் முதலிய புலவர்களிடமும்; கரிகாலன், திருமாவளவன், ஓய்மா நாட்டு நல்லியக்கோடன், இளந்திரையன், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் முதலிய மன்னர்களிடமும்; கடையேழு வள்ளல்களிடமும் இருந்த ஆளுமை வளர்ச்சியை விரித்துரைத்திருக்கிறது.
இலக்கியமும் ஆளுமை வளர்ச்சியும், புலவர்களின் படைப்பாளுமை, தனிமனித ஆளுமை வளர்ச்சி, சமூக மேம்பாட்டிற்கான ஆளுமை வளர்ச்சி ஆகிய நான்கு இயல்களின் மூலம், உளவியலின் தோற்றம்-வளர்ச்சி, ஆளுமையின் வளர்ச்சி, கோட்பாடுகள், வகைகள், படைப்பாளியின் அக-புற ஆளுமைகள், அரசியல், பொருளாதார ஆளுமை வளர்ச்சி முதலியனவற்றை சான்றாகக் கொண்டு "அனைத்துக்கும் தமிழ் இலக்கியமே முன்னோடி' என்பதை நிலைநாட்டியுள்ள சிறந்த ஆய்வு நூல்.