பிரபஞ்சன் படைப்புலகம் - மகரந்தன்; பக்.256; ரூ.310; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
பிரபஞ்சனின் வாழ்க்கையை மட்டுமின்றி, புதுச்சேரியில் வாழ்ந்த இலக்கிய முன்னோடிகளைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் பல்வேறு தகவல்களை இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். இந்நூலில் பிரபஞ்சனின் சிறந்த படைப்புகளில் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பிரபஞ்சனின் படைப்புகளில் முதலில் வெளிவந்தவை கவிதைகள்தாம். பிரபஞ்சனின் சிறுகதைகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமே நகர்த்திச் செல்லப்படுகின்றன. "நேற்று மனிதர்கள்', "சங்கம்',"ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்', "பாதுகை',"கமலா டீச்சர்' போன்ற சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் "கமலா டீச்சர்' என்ற சிறுகதை ஓர் உண்மைக் கதை போலவே விரிகிறது.
பிரபஞ்சனின் குறுநாவல்களில் "குமாரசாமியின் பகல் பொழுது' என்ற குறுநாவலும், நாவல்களில் "சந்தியா',"வானம் வசப்படும்' ஆகியவையும், நாடகங்களில் "அகல்யா', கட்டுரைகளில் "அதிகாரத்துக்கு எதிரான குரல்கள்', "உலகத்தை நோக்கிய உரையாடல்' போன்றவை சிந்திக்கத் தூண்டுபவை.
பிரபஞ்சனே விரும்பிய தொகுப்பு இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது.