வாய்மையே வெல்லும்: என் மாற்றுப் பார்வை-ப.சிதம்பரம்; தமிழில்: ஆர். வெங்கடேஷ்;பக்.304; ரூ.300; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044-2436 4243.
ஜனநாயகத்தில் விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது. அந்தவகையில் தற்போதைய இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை, பிரச்னைகளை, கொள்கைகளை விமர்சித்து எழுதி வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பொருளாதார ஆளுமையுமான ப. சிதம்பரம், "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் 2017-இல் வாரந்தோறும் எழுதிய 53 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி ஜி.எஸ்டி வரை மத்திய பாஜக அரசின் நடவடிக்கை எவ்வளவு தவறானது;அது தனி மனித வாழ்வை எவ்வாறு பாதித்தது; பொருளாதார வளர்ச்சிக்கு எத்தகைய ஊறுவிளைவித்தது என பொருளாதாரச் சீரழிவு குறித்து ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு விமர்சிப்பதும் நாட்டின்பால் அவர் கொண்ட அக்கறையைப் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
பொருளாதாரப் பிரச்னைகள் மட்டுமன்றி மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்ச்சிக்கத் தவறவில்லை.
தற்போது அரசியல் விமர்சனத்துக்குப் பெரும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக நூலாசிரியர் கூறுகிறார். எதிர்க்கருத்துகள் நிராகரிக்கப்படுகின்றன. எதிர்ப்பு இயக்கங்கள் களங்கப்படுத்தப்படுகின்றன. பாஜகவின் மோதல் போக்கு ஜனநாயகத்தைப் பெருமளவு சிதைத்து விட்டதாக நூலாசிரியர் ஆதங்கப்படுகிறார்.