தமிழ் உரைநடை வரலாறு - வி.செல்வநாயகம்; பக்.176; ரூ.150; அடையாளம், புத்தாநத்தம்; 04332 - 273444.
தமிழில் உரை நடை தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கூறும் நூல்.
தொல்காப்பியர் காலத்திலேயே "பாட்டிடை வைத்த குறிப்பு, பாவின்றெழுந்த கிளவி, பொருளோடு புணராப் பொய்ம்மொழி, பொருளொடு புணர்ந்த நகைமொழி' என உரைநடை இருந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தின் கானல் வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை பகுதிகளிலுள்ள வந்துள்ள உரைப் பாகங்களை உரைநடை எனலாம்.
உணர்ச்சிக் கலப்பில்லாத ஒன்றைச் சொல்வதற்கே முதன்முதலில் உரை நடை பயன்பட்டிருக்கிறது.
அடுத்து பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் எழுந்த சாசனங்களில் உள்ள உரைநடை தமிழும், வடமொழியும் கலந்ததாக இருந்திருக்கிறது. இளம்பூரணர், சேனாவரையர், பரிமேலழகர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் ஆகியோர் கையாண்ட உரைநடைகளின் தன்மைகளை இந்நூல் ஆராய்கிறது.
தத்துவபோதக சுவாமிகள், வீரமாமுனிவர், சீகன் பால்கு ஐயர் உள்ளிட்ட ஐரோப்பியர் தமிழ் உரைநடைக்கு அளித்த பங்கு, சிவஞானமுனிவர், சபாபதி நாவலர், ஆறுமுக நாவலர் ஆகியோரின் உரைநடை, தனித்தமிழ் உரைநடை, நவீன இலக்கிய முன்னோடிகளான வ.ரா., பாரதியார், புதுமைப்பித்தனின் உரைநடைகள் பற்றியும், அவற்றின் தன்மைகள் பற்றியும் இந்நூல் விரிவாக ஆராய்கிறது.
பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ள கா.சிவத்தம்பியின் பிற்குறிப்பு, இந்நூலுடன் தொடர்புடைய பலவற்றுக்கு மேலும் தெளிவை ஏற்படுத்துகிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல், இன்று வரை பொருந்தக் கூடிய, பல அரிய அறிவுப்பூர்வமான தகவல்களைக் கொண்டிருப்பது சிறப்பு.