யுவ பாரதம் - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - லாலா லஜபதிராய்; தமிழில்: கல்கி; பக்.284; ரூ.260; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044 - 2489 6979.
சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜபதிராய் எழுதிய இந்நூல், ஆங்கிலேயர்களுக்கெதிரான போராட்டத்தில் அனைத்து மக்களையும் ஒன்று திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் - பல விஷயங்களைப் பார்க்கிறது; பகிர்கிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்ற பல்வேறு பிரித்தாளும் தந்திரங்களைக் கையாண்டனர். "ஹிந்துக்கள் முஸ்லிம்களுக்கு விரோதமாகவும், முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கு விரோதமாகவும் கிளப்பிவிடப்பட்டனர்.
ஜாட்டியர்களை எதிர்த்து ராஜபுத்திரர்களும், ராஜபுத்திரர்களை எதிர்த்து ஜாட்டியர்களும், இவ்விருவருக்கும் விரோதமாக மகாராஷ்டிரர்களும்...இவ்வாறே பற்பல சாதியார்களும் சண்டையிடுமாறு தூண்டப்பட்டனர்.
அவ்வாறு காலூன்றிய பிரிட்டிஷ் ஆட்சி தன்னைப் பலப்படுத்த கையாண்ட பலவித தந்திரங்களை இந்நூல் விளக்குகிறது.
1857 -ஆம் ஆண்டு பெருங்கலகம், அது அடக்கப்பட்ட விதம், 1905 -இல் கர்ஸான் பிரபு செய்த வங்கப் பிரிவினை, அதனால் நாடெங்கும் எழுந்த எதிர்ப்பலைகள், போராட்டங்கள், கர்ஸான் பிரபு காலத்தில் கொண்டு வரப்பட்ட கல்விமுறை சிந்தனைத் திறன் இல்லாத மக்களை உருவாக்க முனைந்தது, ஹியூமால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய இயக்கம், அவற்றின் வளர்ச்சி, வீழ்ச்சி அதன் பிறகு சுயராஜ்யத்தை முழக்கமாக வைத்து இந்திய தேசிய இயக்கம் தோன்றியது, அதில் இருந்த பல்வேறு போக்குகள் என இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றை மிக தெளிவாக இந்நூல் எடுத்துச் சொல்கிறது.
இன்றைய அரசியல் நிகழ்வுப் போக்குகளையும், அரசியல்வாதிகளால் சொல்லப்படும் பல விஷயங்களையும் புரிந்து கொள்ள- சரி பார்க்க - இந்நூல் உதவும் என்பதில் ஐயமில்லை.