பெண் கல்விப் போராளி மலாலா
பெண் கல்விப் போராளி மலாலா -ஜெகாதா; பக்.208; ரூ.180; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044 - 2834 3385.
மலாலா யூசப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரைச் சேர்ந்தவர். பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று தாலிபான் விதித்த தடையை மீறி பள்ளிக்குச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்யும் கொடூரச் செயல்களை "குல்மகை' என்ற புனைபெயரில் பிபிசியின் உருது வலைப்பதிவில் துணிச்சலாக எழுதினார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதினார். பள்ளிகளை தாலிபான்கள் தடை செய்த போதிலும், பள்ளி மாணவிகளை நச்சுப்புகையால் தாலிபான்கள் கொல்ல முயன்றபோதிலும், மரத்தடியில் பெண்களுக்கான பள்ளிகள் நடத்தப்பட்டன. மலாலாவும் அதில் பங்கேற்றார். மலாலாவிற்கு பாகிஸ்தானின் முதல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
மலாலாவைத் தெரிந்து கொண்ட தாலிபான் அக்டோபர் 9, 2012 அன்று அவரைச் சுட்டுக் கொல்ல முயன்றது. படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தார். எனினும் அவர் தாலிபான்களைக் கண்டு அஞ்சவில்லை. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மலாலாவின் போராட்ட வரலாறாகிய இந்நூல், நல்வாழ்வை நேசிக்கும் அனைவருக்கும் பயன்படக் கூடிய ஒன்று.