சங்க இலக்கியத்தில் சமூக அறம் - இரணியன்; பக்.132; ரூ.130; நந்தினி பதிப்பகம், 169, ஆறாவது வீதி தொடர்ச்சி, காந்திபுரம், கோவை-641 012.
"சங்க இலக்கியத்தில் சமூக அறம்' கட்டுரை உள்ளிட்ட 12 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இயற்கை, வாழ்வியக்கம், சமூக வளர்ச்சி பற்றி இயங்கியல் நோக்கில் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளைச் சொல்லும் "தமிழ்த் தொல்லிலக்கியப் பாடல்களில் இயங்கியல் கூறுகள்' கட்டுரை, பகைவரை அழித்து நண்பர்களை உயர்வடையச் செய்ய வேண்டும், வலிமையானவருக்குத் தலைவணங்கி மெலிவானவரை தாழ்த்தக் கூடாது என்பன போன்ற கருத்துகள் சங்க இலக்கியத்தில் உள்ளதை எடுத்துக் காட்டும் "சங்க இலக்கியத்தில் சமூக அறம்' கட்டுரை, சங்க இலக்கியத்தில் இயற்கை காட்சிகள் சித்திரிக்கப்படும் விதம் பற்றிச் சொல்லும் கட்டுரை, மணக்குடவர் உரை திருக்குறள் உரைகளில் எந்த அளவுக்குச் சிறந்து விளங்குகிறது என்று சொல்லும் கட்டுரை, மன்னனாக இருந்தாலும் ஆணும் கற்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் புறநானூற்றுப் பாடல்களைப் பற்றிச் சொல்லும் "சங்க காலம் - அகவாழ்வியலில் சமநிலைப் பிறழ்ச்சி' கட்டுரை ஆகியவை "சங்க இலக்கியங்களைப் பற்றி பேசுகின்றன. பாரதிதாசனின் ஆத்திச் சூடி பற்றிய கட்டுரை, "சங்க இலக்கியங்களையும், அவை பற்றிய ஆய்வுகளையும் பல மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும்; பழங்காலக் கல்வெட்டுகள், கோயில்களைப் பாதுகாக்க வேண்டும், சங்க இலக்கியச் சொற்பொருள் அகரமுதலியை உருவாக்க வேண்டும்' என்று செவ்வியல் தமிழுக்குச் செய்ய வேண்டியவை பற்றி ஆலோசனை கூறும் கட்டுரை என பல அற்புதமான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர் எந்தப் பொருள் குறித்து எழுதினாலும் மிக எளிமையாக, இயங்கியல் பார்வையுடன் எழுதுவது குறிப்பிடத்தக்கது.