எப்போதும் மேப்லித்தோ காகிதத்தில் வெளிவரும் "கல்கி' தீபாவளி மலர், இந்த ஆண்டு க்ளேஸ் நியூஸ் பிரிண்ட் காகிதத்தில் வெளிவந்திருக்கிறது. அதனால் கனம் குறைந்து காணப்பட்டாலும், வண்ண ஓவியங்கள் பளிச்சென்று தெரிகின்றன என்பதைக் கூறியாக வேண்டும்.
வழக்கமான ஒவியர் வேதாவின் அட்டை வண்ணப்படத்துக்கு பதிலாக ஓவியர் கேசவின் மேலட்டை வண்ணப்படம் எதிர்பார்த்திராத மாற்றம்.
பிரபல கார்ட்டூனிஸ்ட்டாக ஆங்கில நாளிதழ் வாசர்களுக்கு அறிமுகமான ஓவியர் கேசவை, துஷ்யந்த் ஸ்ரீதரின் "சத்தியத்தைத் தழைக்கச் செய்த சத்தியபாமா' கட்டுரைக்கு ஓவியம் வரைய வைத்துத் தமிழ் வாசர்களுக்கு விருந்து வைத்திருக்கிறது "கல்கி' தீபாவளி மலர்.
வழக்கமான, அதே நேரத்தில் சுவாரஸ்யமான ஆன்மிகக் கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், பேட்டிகள் என்று தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த தீபாவளி மலரில் உள்ள சிறப்பு, அதிக அளவில் கவிதைகளுக்கு இடமளித்திருப்பதுதான். அதைவிடச் சிறப்பு, புதிய பல ஓவியர்களையும், ஓவியப் பிரபலங்களையும் அந்தக் கவிதைகளுக்குப் படம் வரையச் சொல்லி சிறப்பித்திருப்பது. ஓவியர்களின் அணிவகுப்பையே நடத்தி இருக்கிறது "கல்கி' தீபாவளி மலர்.
தனது பாரம்பரிய அணுகுமுறையையும் விட்டுவிடாமல், காலத்துக்கேற்ப மாற்றங்களையும் மேற்கொள்ள முயற்சித்திருக்கிறது "கல்கி'!