போதி தர்மா (4 பாகங்கள்) - கயல் பரதவன்; மொத்த பக்.2856; ரூ.1700; நர்மதா பதிப்பகம், சென்னை-17; 044- 2433 4397.
நீலகண்ட சாஸ்திரி எழுதிய "தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்' என்ற நூலில் இந்தியாவிலிருந்து சீனா போவதற்கான கடல் வழியைப் பர்றி விவரிக்கும் இடத்தில் போதி தர்மா பற்றிய குறிப்பு வருகிறது. காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பெளத்த சன்னியாசியாகி சீன தேசத்திற்கு ஜென் பெளத்தத்தையும் குங்ஃபூ என்கிற மற்போரையும் கற்றுத் தந்தவர் போதி தர்மா. அவரது கால (கி.பி.520) தந்திர அரசியலைப் பற்றி விவரிக்கும் வரலாற்று நாவல் இது.
போதி தர்மா ஒரு துறவியாக இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட சவால்களை எப்படி சாதுர்யமாக எதிர் கொண்டு வெற்றி பெற்றார் என்பதைத் திருப்பங்களுடன் சுவாரசியமாய் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். போதி தர்மா இந்த நாட்டை விட்டு போகும்போது அவருக்குப் பாதுகாவலனாக அவருக்குத் தெரியாமல் செல்ல வேண்டும் என்று தேவகுப்தன் என்கிற இளந்திரையனைத் தயார் செய்கிறார், பல்லவ சக்ரவர்த்தி. அவனது வீரமும், சாகசங்களும் நாவலுக்கு விறுவிறுப்பை அளிக்கின்றன.
யவன அழகி காத்தரீனா, குப்த இளவரசி ராஜ்யஸ்ரீ பாத்திரங்களும் நாவலில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அரசர்களிடம் செல்வாக்குப் பெற நிலச்சுவான்தார்களுக்கும் வணிகர்களுக்கும் நடைபெறும் போட்டியும் கதை நடைபெறும் காலத்தின் பதிவாக இடம் பெற்றுள்ளது. இந்திய, தமிழ், சீன, மத்திய கிழக்கு, தென்கிழக்காசியா, உரோமாபுரி நாடுகளின் வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நாவல், வாசகர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.