தடங்கள் - ராபின் டேவிட்சன்; தமிழில்: பத்மஜா நாராயணன்; பக்.312; ரூ.320; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி - 2; 04259 - 226012
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ராபின் டேவிட்சன் என்ற பெண்மணி நான்கு ஒட்டகங்கள் மற்றும் தனது ஒரே சொந்தமான "டிக்கிட்டி' எனும் நாயை அழைத்து கொண்டு 1977 - ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாலைவன எல்லை நகரான ஆலிஸ் ஸ்பிரிங் என்ற ஊரில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை 1700 மைல்கள் தனியே பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் ஏற்பட்ட சுவையான அனுபவங்களை விளக்கி அவர் எழுதிய பயண நூலான "ட்ரேசஸ்' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பே "தடங்கள்'.
ஒழுக்கம் சீரழிந்து, காலனிய ஆதிக்கத்தின் தாக்கம் மேலோங்கியிருந்த ஆலிஸ் நகர ஆண் சமுதாயத்தின் அவல நிலையும், 1970களின் ஆஸ்திரேலியாவும், அதன் பூர்வ குடிகளின் வாழ்வும் நூலில் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தான் எடுத்த முடிவிலிருந்து சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து போராடிய ராபின் டேவிட்சனின் துணிச்சலே புதுமைப்பெண்களின் அழகென இந்நூல் பறைசாற்றியுள்ளது. 1700 மைல்கள் தூர பயணம் போல கதை ஆங்காங்கே மெதுவாய் சென்றாலும் பயணத்தின் அருமையும், பாலைவனத்தின் தனிமையும், ராபின் டேவிட்சனின் திறமையும் நம்மை கதையோடு ஒன்றச் செய்துவிடுகின்றன.