நலம் நலமறிய ஆவல் - நாகூர் ரூமி; பக்.448; ரூ.420; பினாக்கிள் புக்ஸ், சென்னை - 58; 044 - 2345 7601.
நமது வாழ்முறைத் தவறுகளினால் நமக்கு நோய் வருகிறது. வாழ்முறையை சரிசெய்துகொண்டால் நோய்களைக் குணப்படுத்தும் வேலையை நம் உடலே செய்து கொள்ளும். வேண்டுமெனில், பாரம்பரியமான வீட்டு வைத்தியம் செய்துகொள்ளலாம். எந்த நோயைப் பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை - இதுதான் இந்த நூலின் சாராம்சம்.
சாதாரண தலைவலி, காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய்வரை எல்லா நோய்களைப் பற்றியும் இந்நூலில் விரிவாக அலசப்பட்டுள்ளது. ஆனால், எதுவுமே பயமுறுத்தும்படியாக இல்லை. சொல்லப்போனால், நோயைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தாலே - ஆனால் அக்கறை செலுத்த வேண்டும் - நோய் குணமாகிவிடும் என்று கூறுகிறார் நூலாசிரியர்.
பொதுவாகவே மனிதர்கள் நோய் வந்தால் மருந்து, மாத்திரைகளைத் தேடி ஓடுகிறார்கள். அவைதான் நோயைக் குணமாக்கும் என்று கருதுகிறார்கள். அது தவறு. உண்மையில் நம்பிக்கைதான் நோயைக் குணமாக்கும் என்பதை பல உதாரணங்களுடன் (சட்டைப் பொத்தானை மாத்திரை என்று சொல்லி நோயாளியின் வாயில் வைத்தது, அறுவை சிகிச்சை செய்யாமலே செய்ததாகக் கூறி நோயாளியை நம்ப வைத்தது) விளக்கியிருக்கிறார்.
எந்த நோயும் உடலில் தோன்றிய பின் மனத்திலும் தோன்றிவிடுகிறது. உடலில் தோன்றும் காய்ச்சலை நம்மால் துடைக்க முடியாது. ஆனால், மனத்தில் தோன்றும் காய்ச்சலை நாம் துடைத்துவிட முடியும். காய்ச்சலை மறந்துவிட்டு வழக்கம்போல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
நோய் வந்தவுடன் மருந்து, மாத்திரைகளைத் தேடி ஓடும் பதற்றத்தையும், மருத்துவமனைகளை எண்ணி வரும் கலக்கத்தையும் இந்நூல் நிச்சயம் மாற்றும்.