தடைபட்ட திருமணம் நடைபெற - பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர, மாணிக்கவண்ணர் (ரத்தினகிரீஸ்வரர்) கோவில், திருமருகல்

நன்னிலத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில், நாகூர் செல்லும் சாலை வழியில் இத்தலம் உள்ளது.

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டும் உள்ளன. (சம்பந்தர் பாடிய இரண்டு பதிகங்களில் ஒன்று திருமருகல். திருசெங்கட்டாங்குடி, இரண்டு சிவஸ்தலத்துக்கும் பொதுவானது).

     இறைவன் பெயர்: மாணிக்கவண்ணர், ரத்தினகிரீஸ்வரர்
     இறைவி பெயர்: வண்டுவார் குழலம்மை

எப்படிப் போவது

நன்னிலத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில், நாகூர் செல்லும் சாலை வழியில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை வழியாகவும் திருமருகல் தலத்தை அடையலாம். திருமருகலில் இருந்து அருகில் உள்ள திருசாத்தமங்கை, திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்துக்குப் பேருந்துகள் உள்ளன.

ஆலய முகவரி

நிர்வாக அதிகாரி,
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்,
திருமருகல், திருமருகல் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609 702.

இக்கோயில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய சிவாச்சாரியார் சுந்தர கணபதி - தொடர்புக்கு - 9786192196

கோச்செங்கட் சோழன் கட்டிய, யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் திருமருகல் ஆலயமும் ஒன்றாகும். மருகல் என்பது ஒருவகை கல்வாழையைக் குறிக்கும். இதைத் தலமரமாகக் கொண்டதால், இத்தலம் திருமருகல் என்று பெயர் பெற்றது. கிழக்கு திசையிலுள்ள 68 அடி உயரமான கோபுரமே பிரதான நுழைவாயிலாகும். கோவிலுக்கு வெளியே, எதிரில் இத்தலத்தின் தீர்த்தமான மாணிக்கதீர்த்தம், நீராழி மண்டபத்துடன் உள்ளது. தீர்த்தக்கரையில் முத்து விநாயகர் சந்நிதியைக் காணலாம். தென் திசையில் ஒரு சிறிய கோபுரம் உள்ளது. நான்கு புறமும் மதில்களை உடைய இக்கோவிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன.

கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. பிராகாரத்தில் கொடிமர மண்டபத்தின் மேற்கே அம்பாள் சந்நிதி அமைந்திருக்கிறது. மூலவர் ரத்தினகிரீஸ்வரர் (மாணிக்கவண்ணர்) சந்நிதி ஒரு கட்டுமலை மேல் அமைந்திருக்கிறது. மூலவர் சுயம்புமூர்த்தியாக சிவலிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். சுவாமி சந்நிதிக்குப் போகும் வாயிற்படியில், வடபுறம் சனி பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. இதுபோல வேறு எந்தத் தலத்திலும் சனி பகவானைக் காண முடியாது. உள்பிராகாரத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள், பராசரலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.
 

கோயிலின் உட்பிராகாரத்தில் வடக்கு மதில் ஓரமாக வன்னி மரம் இருக்கிறது. இம்மரத்தின் அடியில்தான், ஞானசம்பந்தர் விஷம் தீர்த்து எழுப்பிய செட்டி மகனுக்கும், செட்டிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்திவைத்தார் என்று சொல்லப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாகக் கணபதியும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். நவக்கிரக சந்நிதியும், பைரவர், சூரியன் திருவுருவங்களும், ஒரே பீடத்தில் அமைந்துள்ள செட்டி மகன், செட்டிப் பெண் மூலத்திருவுருவங்களும், ஞானசம்பந்தர் மூலமேனியும் அடுத்தடுத்து உள்ளன.
 

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழ் வைப்புத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களுடனும், தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

விஷம் நீக்கிய வரலாறு

பாண்டிய நாட்டு வணிகனாகிய தாமன் என்பவன், தன் பெண் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். ஆனால், வாக்களித்தடி நடக்காமல், அவனுடைய பெண்களுக்குப் பருவம் வந்த காலத்து, ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாவது பெண், தாய் தந்தையர் அறியாமல் தன் மாமனோடு வெளியேறி, பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ள நிச்சயித்தனர்.
 

இருவரும், திருமருகலை அடைந்து, ஒரு திருமடத்தில் இரவு தங்கினர். அன்றிரவு, அந்தச் செட்டி குமரனை வினையின் காரணமாக பாம்பு தீண்டி அவன் இறந்தான். திருமணம் ஆகாததால், அவனது உடலைத் தீண்டாமல், இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண், இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள். சுவாமி தரிசனத்துக்காக வந்த திருஞானசம்பந்த சுவாமிகள், திருஉள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள் சுரக்கச் செய்தது. இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர், இறைவன் மேல்

சடையாயெனுமால் சரண்நீ எனுமால்
விடையா யெனுமால்வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவளுண் மெலிவே

என்று தொடங்கும் பதிகம் பாட, சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி, இறந்துகிடந்தவன் உயிர்பெற்று எழுந்தான். பிறகு அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார். விடம் நீக்கிய பதிகம் என்று அறியப்பட்டாலும், அதன் பலனாக செட்டிப் பெண் திருமணம் நடந்ததால், திருமருகல் ஒரு திருமணத் தடை நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. மேலும், திருமணம் ஆகி ஏதேனும் காரணங்களால் பிரிந்து வாழும் தம்பதியினர், இத்தலத்து இறைவனிடம் வேண்டிக்கொண்டு வழிபட்டால், பிரிந்தர் கூடி வாழ்வர் என்பது நிச்சயம். திருமாலை விட்டுப் பிரிந்த மஹாலக்ஷ்மியும் இத்தலத்துக்கு வந்து சிவனை வழிபாடு செய்து, திருமாலுடன் மீண்டும் இணைந்து வாழ அருள் பெற்றாள் என்று தலபுராணம் கூறுகிறது.

சம்பந்தப் பெருமான், திருமருகலில் விடம் தீர்த்து அத்தலத்தில் தங்கியிருந்தபோது, சிறுத்தொண்டர் வந்து திருசெங்காட்டங்குடிக்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். சம்பந்தரும் அடியார்களுடன் திருமருகல் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, சிறுத்தொண்டருடன் திருசெங்காட்டங்குடி செல்ல ஆயத்தமானார். திருமருகல் இறைவன், திருஞானசம்பந்தருக்கு திருமருகல் கோவிலிலேயே திருசெங்காட்டங்குடி கணபதீச்சரத்து இறைவனைக் காட்டி அருள்புரிந்தார். சம்பந்தரும், "அங்கமும் வேதமும் ஓதும் நாவர்" என்று தொடங்கும் (திருமருகல், திருசெங்கட்டாங்குடி இரண்டு சிவஸ்தலத்துக்கும் பொதுவான) பதிகம் பாடினார்.

சம்பந்தரின் தேவாரம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

சம்பந்தரின் தேவாரம் - பாடியவர்கள் பாலச்சந்திரன் மற்றும் சுந்தர்

அப்பரின் தேவாரம் - பாடியவர்கள் பாலச்சந்தரின் மற்றும் சிவகுமார்

புகைப்படங்கள் உதவி: ஸ்டில்ஸ் எஸ். சிவா, ஸ்ரீகங்கை டிஜிட்டல் போட்டோஸ், குத்தாலம், 9443026611, 7373443314

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com