வழக்கு விவகாரங்களில் வெற்றி தேடித் தரும் திருநாவலூர்

பாடல் பெற்ற நடுநாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 8-வது தலம் பக்தஜனேஸ்வரர் திருக்கோவில், திருநாவலூர். இன்றைய நாளில் இவ்வூர் திருநாமநல்லூர் என்று வழங்கப்படுகிறது.

   இறைவன் பெயர்: திருநாவலேஸ்வரர், பக்தஜனேஸ்வரர்
   இறைவி பெயர்: சுந்தரநாயகி, மனோன்மணி

இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் தாண்டி மடப்பட்டு என்ற ஊர் வரும். அதைத் தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே பிரிந்து, பண்ருட்டி செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் ஊரை அடையலாம். சாலையோரத்தில் ஊரின் தொட்டக்கத்திலேயே கோயில் உள்ளது.

பேருந்தில் செல்வோர் விழுப்புரத்திலிருந்து அரசூர், மடப்பட்டு வழியாக உளுந்தூர்ப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி, கெடிலம் நிறுத்தத்தில் (திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள இடமே கெடிலம் நிறுத்தம் என்று சொல்லப்படுகிறது) இறங்கினால், திருக்கோவிலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் பேருந்துகள் வரும். அவற்றில் ஏறி 2 கி.மீ. சென்று மேற்சொன்ன கோயிலை அடையலாம். கோயில் அருகிலேயே பேருந்துகள் நிற்கும்.

அருகிலுள்ள பெரிய ஊர் பண்ருட்டி. அங்கிருந்து திருநாவலூருக்குப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில்,
திருநாவலூர், திருநாவலூர் அஞ்சல்,
உளுந்தூர்பேட்டை வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் – 607 204.

இக் கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய குருக்கள்

முத்துசாமி சிவம் (செல்பேசி 94433 82945)
செந்தில் குருக்கள் (செல்பேசி 94861 50809)

இறைவன் வழக்கு தொடுத்த தலம்

சுந்தரமூர்த்தி நாயனார், திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் என்ற ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஆதி சைவர் குலத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் நம்பியாரூரன். சுருக்கமாக ஆரூரன் என்று அழைக்கப்பட்டார். இவருடைய அழகைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்ததால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். சுந்தரர், சிறுவயதில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி நாட்டு அரசர் நரசிங்கமுனையார், சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப்போல் அனைத்து கலைகளையும் கற்றுத் தந்தார்.

திருமணப் பருவம் அடைந்தபோது, சுந்தரருக்கு திருநாவலூருக்கு அருகிலுள்ள புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரர் மேல் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்தணர் நாவலூர் நம்பியை நோக்கி, ‘எனக்கும் உனக்கும் ஒரு பெருவழக்கு உள்ளது. அதனை முடித்தபின் திருமணத்தைச் செய்துகொள்க என்று கூற, சுந்தரர் அந்தணரைப் பார்த்து, ‘உமக்கும் எமக்கும் வழக்கு இருப்பது உண்மையானால், அதனை முடிக்காமல் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன்; உம் வழக்கினைக் கூறுக’ என்றார்.

முதிய அந்தணராக வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவரது வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்று வாதிட்டார். சுந்தரர் அதை மறுத்து, ஒரு அந்தணருக்கு இன்னொரு அந்தணர் அடிமையாவது எப்படி முறையாகும். இந்த அந்தணர் பொய் வழக்காடுகிறார் என்று எதிர்வாதம் செய்து, அந்தணராக வந்த இறைவன் கையிலிருந்து ஓலையைப் பிடுங்கி அதைக் கிழித்து எறிந்தார். அந்த அந்தணர், சுந்தரரைப் பார்த்து நீ கிழித்து எறிந்த ஓலை படியெடுக்கப்பட்டது. மூல ஓலை எனது ஊரான திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது. அங்கு வந்தால்தான் எனது வழக்கு தீரும் என்று கூற, சுந்தரரும், மற்ற ஊர் மக்களும் அவரைப் பின்தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் சென்றனர். அங்கு மூல ஓலையைக் காட்டி, சுந்தரரின் பாட்டனார் கையெழுத்தை மற்ற பழைய ஆவணங்களுடன் பொருத்திப் பார்த்து, சுந்தரர் அடிமை என்று எழுதிக்கொடுத்த ஓலை சரியானது என்று ஊர் மக்கள் தீர்ப்பு கூற, தனது வழக்கில் வென்றார். சுந்தரர் மேல் வழக்கு தொடர்ந்து அவரை தடுத்தாட்கொண்ட இறைவன், இன்றும் தன்னை வழிபடும் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்கள் சந்திக்கும் வழக்குகளில் இருந்து அவர்கள் வெற்றிபெற அருள் செய்கிறார்

ஆலய அமைப்பு

கெடில நதியின் வட கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோபுரத்தையடுத்து இடதுபுறம் உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது. திருநாவலூர் சுந்தரரின் அவதாரத் தலம். தனது இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளை யானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார். பூலோக வாழ்க்கையை நீத்து, சுந்தரர் கயிலாயம் சென்றபோது, யானை மீது சென்றதாக வரலாறு கூறுகிறது. எனவே, சுந்தரருக்கு எங்கே சந்நிதி அமைத்தாலும் யானை வாகனமே அமைப்பது வழக்கம். உள் இடம் மிகவும் விசாலமாக உள்ளது.

கோபுர வாயில் கடந்தவுடன் எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி முதலியவை உள்ளன. கொடிமர விநாயகர், சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். உள்வாயிலைக் கடந்ததும், உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நால்வர், இரு மனைவியருடன் சுந்தரர், நடராசர், சிவகாமி, முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. நேரே, மூலவர் பக்தஜனேஸ்வரர் சிறிய கருவறையில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். பங்குனி மாதம் 23 முதல் 27-ம் நாள் வரை, சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. நடராச சபை உள்ளது. உள்பிராகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.

பிராகாரத்தில் பொல்லாப் பிள்ளையார், சேக்கிழார், நால்வர், அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர் முதலிய சந்நிதிகளும், தொடர்ந்து நான்கு யுகலிங்கங்களும், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. கருவறைச் சுவரில் சண்டேசுரர் வரலாறு சிற்பங்கள் வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களைத் துண்டிப்பது, இறைவன் கருணை செய்வது ஆகியவை காணப்படுகிறது. நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவர் வழிபட்ட சுக்கிரலிங்கம் உள்ளது. நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மேற்கு நோக்கி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார். பக்கத்தில் பைரவரும் சூரியனும் உள்ளனர். இவ்வாலயத்தின் தீர்த்தங்கள் கெடில நதியும், கோமுகி தீர்த்தமும் ஆகும். கெடில நதி ஊருக்குத் தெற்கே ஒரு கி.மீ. தூரத்திலும், கோமுகி தீர்த்தம் கோயிலுக்கு மேற்கிலும் இருக்கின்றன.

அம்பாள் கோயில் தனியே அழகான முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். வடக்குச் சுற்றில் தல மரங்களான நாவல் மரங்களை அம்மன் சந்நிதிக்கு அருகில் காணலாம். இந்த ஊருக்கு நாவலூர் எனும் பெயர் ஏற்பட காரணம் இதுவே. இத்தலத்தின் விருட்சமான நாவல் மரம் ரோகிணி நட்சத்திரத்துக்கு உரிய மரமாகும். ஆகவே, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனையும், அம்பாள் மனோன்மணியையும் மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடுவது நலனைத் தரும்.

மகாவிஷ்ணு வழிபட்ட தலம்

இரண்யன் என்ற அசுரன் (பிரகலாதனின் தந்தை) தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவுசெய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன், தனக்கு மரணம் நிலத்திலும், நீரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரமும் பெற்றிருந்தான். இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க, மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார்.

நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம்தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிராகாரத்தின் வடக்குச் சுற்றில், ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகள் ஏறிப் போக வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது.

கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி, ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடி ஏந்தி நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சுக்கிர பகவான் இத்தலத்தில் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோஷம் நிவர்த்தி பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. சுக்கிரனால் நிறுவி வழிபடப்பட்ட லிங்கம், நவகிரகங்களுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

திருப்புகழ் தலம்

இத்தலத்து முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் ஒரு திருமுகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்றவாறு எழுந்தருளியுள்ளார்.

*

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில்

காஞ்சிபுரம் நகரில் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. தேவர்கள் மற்றும் முனிவர்கள் இடையே சத்து, அசத்து என்ற இரண்டு சொற்களுக்கு உண்மை பொருள் அறிய வாக்குவாதம் நடந்தபோது, அந்த வார்த்தைகளின் உண்மைப் பொருளை விளக்கி வழக்கினை தீர்த்ததால், இங்கு கோவில் கொண்டுள்ள இறைவன் வழக்கறுத்தீஸ்வரர் என்று அறியப்படுகிறார். இறைவி மருகுவார்குழலி அம்மை என்ற திருநாமத்துடன் இக்கோவிலில் அருள் பாலிக்கின்றாள். நடுநிலையுடன் நின்று வழக்குகளை தீர்த்துவைக்கும் ஒரு தெய்வீகக் கல் இக்கோவிலில் இருந்துள்ளது என்றும், இறைவன் முன் வழக்குகள் தீர்ந்ததால், இறைவன் வழக்கறுத்தீஸ்வரர் என்றும் வணங்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

வழக்கறுத்தீஸ்வரர் தன்னிடம் வந்து வேண்டும் பக்தர்களின் வழக்குகளை தீர்ப்பதுடன், வழக்குக்கு மூல காரணமாக விளங்கும் காரணத்தைக் கண்டறிந்து வழக்குகளை தீர்த்துவைக்கிறார். இந்த ஆலயத்தில் திங்கள்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால், நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைப்பது நிச்சயம் என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

சுந்தரரின் தேவாரம் - பாடியவர்கள் பாலச்சந்திரன் மற்றும் சிவக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com