களவு போன பொருள் திரும்பக் கிடைக்க அருளும் திருமுருகன்பூண்டி

     இறைவன் பெயர்: திருமுருகநாதஸ்வாமி
     இறைவி பெயர்: முயங்கு பூண்முலை மங்கை
இத்தலத்துக்கு சுந்தரரின் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவிநாசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில், அவிநாசி - திருப்பூர் சாலை வழியில் திருமுருகன்பூண்டி உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில்,
திருமுருகன்பூண்டி அஞ்சல்,
அவிநாசி வட்டம்,
திருப்பூர் மாவட்டம் – 637 211.

இக் கோயில், காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

சேர நாட்டை ஆண்டுவந்த சேரமான் பெருமாள்நாயனார், சுந்தரரின் பெருமையினைத் தில்லைக் கூத்தனுர் உணர்த்தக்கேட்டு, சுந்தரரைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் சிதம்பரம் வந்து இறைவனை தரிசித்து, திருவாரூரை அடைந்தார். சேர வேந்தர் வருவதை அறிந்த சுந்தரர், அடியார்கள் புடைசூழச் சென்று அவரை எதிர்கொண்டு அழைத்தார். இருவரும் நட்புபூண்டு திருக்கோயிலை அடைந்து வழிபட்டனர். பல சிவஸ்தலங்களை இருவரும் சேர்ந்து தரிசித்தனர். பிறகு சேரமான், தம் தோழராகிய சுந்தரரைத் தன்னுடைய நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமென வேண்டிக்கொண்டார்.

சேரமான் வேண்டுகோளின்படி, சேர நாட்டுக் கொடுங்கோளூரை அடைந்த சுந்தரரை, சேரமான் சிறந்த முறையில் வரவேற்றார். திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்று தரிசிக்கச் செய்தார். சில நாட்கள் அங்கு தங்கி இருந்த சுந்தரர், திருவாரூர் இறைவனை காண வேண்டும் என்ற ஆவலுடன் சேரமானிடம் விடைபெற்றுக்கொண்டு திருவாரூர் புறப்பட்டார்.

சேரமான் கொடுத்த பரிசுப் பொருடகளுடன் சுந்தரர் திருவாரூர் செல்லும் வழியில், கொங்குநாட்டுத் தலமான திருமுருகன்பூண்டி அடைந்தார். சுந்தரர் தனக்கு பொருள் வேண்டும் காலங்களில் இறைவனிடம் முறையிட்டுப் பெறுவது வழக்கம். இப்போது தன்னிடம் முறையிடாமல், சேரமானிடம் பொருள் பெற்று சுந்தரன் செல்கிறானே என நினைத்து, பூதகணங்களை வேடர்கள் உருவில் சென்று வழிப்பறி செய்து வருமாறு சிவபெருமான் பணித்தருள, அவ்வண்ணமே பூதகணங்கள் வேடர்களாகச் சென்று சுந்தரரை அச்சுறுத்தி, பொருள்களைப் பறித்துக்கொண்டு வந்தன.

சுந்தரர், திருமுருகன்பூண்டித் திருக்கோயிலுக்குள் சென்று இறைவனைப் பார்த்து "எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே" என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் நிந்திப்பதைப்போல பதிகம் பாடியவுடன், இறைவன் அத்தனை பொருள்களையும் பூதகணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார். இதற்குச் சான்று கூறும் வகையில், இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிசுப் பொருள்களை பறிகொடுத்த நிலை ஒன்று, பறிகொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று என இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்.

இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன்பூண்டி விளங்குகிறது. களவுபோன பொருட்களை சுந்தரருக்கு மீண்டும் திருப்பித் தந்த இத்தல இறைவனை தரிசித்து வேண்டிக் கொண்டால், திருடுபோன நம் பொருட்களும் திரும்பக் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை.

கோவில் அமைப்பு

நொய்யல் ஆற்றின் வடபகுதியில் அமைந்த மேற்கு நோக்கிய தலம் திருமுருகன்பூண்டி. மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்தக் கோவிலில் மற்ற கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாக 2 பிராகாரங்களுடன் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.

கோவிலின் மூலவரான திருமுருகநாதர், சிவலிங்க ரூபத்தில் சுமார் இரண்டரை அடி உயரம் உள்ளபடி தரிசனம் தருகிறார். மேற்குப் பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது. கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர். கருவறை விமானத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. உட்பிராகாரத்தில் நிருதி விநாயகர், 63 நாயன்மார்கள், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள் சந்நதிகள் உள்ளன.

மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் சண்முகர் சந்நிதி உள்ளது. 5 அடி உயரம் உள்ள இந்த சிற்பம், முன்பக்கம் 5 முகங்களும், பின்பக்கம் ஒரு முகமும் உடையதாக அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை மங்கையின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் 5 பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

புராணங்களின்படி, அரக்கன் சூரபத்மனைக் முருகப்பெருமான் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்துக்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். கோவிலுக்கு உள்ளே பிராகாரத்தில் சுப்பிரமணிய தீர்த்தமும், கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்தப்பிரமை பிடித்தவர்களை இந்த சிவஸ்தலத்துக்கு அழைத்துவந்து தங்கியிருக்கச் செய்து, தினமும் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவர, அவர்களுடைய சித்தப்பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமுருகநாதசுவாமி ஆலயத்தின் பின்புறம், இவ்வாலயத்தின் மிக அருகே மாதவனேஸ்வரர் கோவில் என்ற ஒரு கோவிலும் உள்ளது. இவ்வாலயத்தின் முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில் பெரிய நந்தியெம்பெருமான் சிற்பம் உள்ளது. இக்கோவிலின் வடமேற்கு மூலையில் கேது பகவானுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே, இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.


சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும்.

1. கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு
ஆறலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

2. வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியும்
கூறை கொள்ளும் இடம்
முல்லைத் தாது மணம் கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பது ஒன்று இல்லை யாகில் நீர்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

3. பசுக்களே கொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்று அறியார்
உசிர்க்கொலை பல நேர்ந்து நாடொறும்
கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போல் பலவேடர் வாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இசுக்க அழியப் பயிக்கம் கொண்டு நீர்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

4. பீறர் கூறை உடுத்து ஓர் பத்திரம்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கியராகி நாள் தொறும்
கூறை கொள்ளும் இடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏறு காலல் இற்றது இல்லையாய்விடில்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

5. தயங்கு தோலை உடுத்த சங்கரா
சாம வேதம் ஓதி
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும்
மார்க்கம் ஒன்று அறியீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு
முருகன் பூண்டி மாநகர் வாய்
இயங்கவும் மிடுக்குடையராய் விடில்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

6. விட்டு இசைப்பன கொக்கரை கொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்துமியொடு
குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சை கொண்டு உண்பமு ஆகில் நீர்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

7. வேதம் ஓதி வெண்நீறு பூசிவெண்
கோவணம் தற்று அயலே
ஓதம் மேவிய ஒற்றியூரையும்
உத்திரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளும்
முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் எது காவல் கொண்டு
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

8. படஅரவு நுண் ஏர் இடைப்பணைத்
தோள் வரி நெடுங்கண்
மடவரல் உமை நங்கை தன்னை ஓர்
பாகம் வைத்து உகந்தீர்
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடவம் எறியும் போவது ஆகில் நீர்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

9. சாந்தமாக வெண்நீறு பூசிவெண்
பல் தலை கலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னை ஓர்
பாகம் வைத்து உகந்தீர்
மோந்தை யோடு முழக்கு அறா முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

10. முந்தி வானவர் தாம் தொழும் முருகன்
பூண்டி மாநகர் வாய்ப்
பந்து அணைவிரர் பாவை தன்னை ஓர்
பாகம் வைத்தவனைச்
சிந்தையில் சிவதொண்டன் ஊரன்
உரைத்தன பத்தும் கொண்டு
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர்
ஒன்றும் தாம் இலரே.

இத்தலம் பற்றிய பதிகத்தைப் பாடியவர்கள் - கரூர் சுவாமிநாதன் மற்றும் மதுரை பொன் முத்துக்குமரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com