பங்காளிச் சண்டை - பிரச்னைகள் தீர அபிராமேஸ்வரர் கோவில், திருஆமாத்தூர்

பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது திருஆமாத்தூர்.

பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது திருஆமாத்தூர்.
 

    இறைவன் பெயர்: அபிராமேஸ்வரர், அழகிய நாதர்
    இறைவி பெயர்: முத்தாம்பிகை, அழகிய நாயகி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, சுந்தரர் பதிகம் ஒன்று என மொத்தம் 5 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

விழுப்புரம் - திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் "திருவாமாத்தூர்" கைகாட்டி உள்ளது. அங்கு இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் 6 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். விழுப்புரம் - சூரப்பட்டு நகரப் பேருந்து திருவாமாத்தூர் வழியாகச் செல்கிறது. விழுப்புரம், சென்னையில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில்,
திருவாமாத்தூர் அஞ்சல்,
விழுப்புரம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் – 605 402.

இக்கோயில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆநிரைகளும் தங்களை அழிக்கவரும் சிங்கம், புலி போன்ற மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவை வேண்டுவது சரியே என்று கூறி, பம்பை நதிக்கரையில் உள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன.



ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. இந்த திருஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புடையது.

திருவட்டப்பாறை வரலாறு

முன்னொரு காலத்தில் இத்தலத்தில் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். பெற்றோர் இறந்த பிறகு, குடும்ப சொத்தை அண்ணன் விற்று தங்கம் மற்றும் வைரமாக மாற்றிக்கொண்டான். தங்கம் மற்றும் வைரத்தை ஒரு கைத்தடியில் மறைத்துவைத்து அதை தன்னுடனேயே வைத்துக்கொண்டான். அப்பாவியான தம்பி, அண்ணனால் தான் ஏமாற்றப்பட்டதாக ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டான். அவர்கள் அண்ணனிடம் நியாயம் கேட்க, தம்பியின் சொத்து எதுவும் தன்னிடம் இல்லை என்று சாதிக்க, இறுதியில் சத்தியப்பாறையான திருவட்டப்பாறை முன் அண்ணன் சத்தியம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. நயவஞ்சகம் கொண்ட அண்ணன், வட்டப்பாறை முன்பு சத்தியம் செய்வதற்கு முன், தங்கம் மற்றும் வைரத்தை மறைத்து வைந்திருந்த கைத்தடியை தம்பியிடம் கொடுத்து, "இதை நீ வைத்திரு. சத்தியம் செய்த பிறகு உன்னிடமிருந்து வாங்கிக்கொள்கிறேன்" என்று கூறினான். தம்பியும் கைத்தடியை வாங்கிக்கொள்ள, அண்ணன் வட்டப்பாறை முன் நின்று என்னிடம் தம்பியின் சொத்து எதுவும் இல்லை; எல்லாம் அவனிடம்தான் இருக்கிறது என்று சத்தியம் செய்தான். வட்டப்பாறை முன் அண்ணன் செய்த சத்தியத்தை நம்பி ஊரார் கலைந்துசென்றனர். தம்பியோ, இத்தல இறைவனிடம் என்னை இப்படி ஏமாற்றிவிட்டாயே என்று அழது புலம்பினான்.

 

அண்ணன் ஆலயத்தில் இருந்து சற்று தொலைவு சென்ற பின், வட்டப்பாறை முன் பொய் சத்தியம் செய்தால் இறைவன் தண்டிப்பார் என்று சொன்னார்களே, ஒன்றும் ஆகவில்லேயே என்று ஏளனம் செய்து சிரிக்க, கோபம் கொண்ட இறைவன் ஒரு கருநாகம் உருவெடுத்து அண்ணனைத் தீண்ட அவன் மறு நொடியில் இறந்தான். அப்படி அவனைத் தீண்டிய நாகத்தின் தலைபாகம் இன்றளவும் நாகத்தம்மன் என்ற பெயரோடு இத்தலத்துக்கு அருகிலுள்ள தும்பூர் என்னும் தலத்தில் அருள்பாலித்து வருகிறார். அந்த நாகத்தின் வால் பகுதி, இத்தல இறைவி முத்தாம்பிகையின் மார்புப் பகுதியை அலங்கரித்து வருகிறது. தரிசிக்க விரும்புவோர், சிவாச்சாரியாரிடம் கேட்டு நேரில் காணலாம். அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளிக் கவசத்திலும் சர்ப்பத்தின் வால் செதுக்கப்பட்டுள்ளது.
 

அப்படி புகழ்பெற்ற புராண வரலாறு கொண்ட இந்த திருவட்டப்பாறை லிங்கேஸ்வரரை தரிசித்து வழிபட்டால் தீராத சிக்கல்கள், பங்காளிகள் இடையே ஏற்படும் சொத்து சம்பந்தமான வழக்குகளுக்கு நியாயமான முறையில் தீர்வு கிட்டும். அம்பிகை சந்நிதியின் பிராகாரச் சுற்றில் தென்புறம் ஒரு வட்டப்பாறையும், அருகில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. ராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் ராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்புகொண்டபோது இந்த வட்டப்பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாகப் புராண வரலாறு கூறுகிறது.

 

ஊரில் உள்ள எல்லோரும் வட்டப்பாறையின் மீது கைவைத்து சத்தியம் செய்து தங்கள் வழக்குகளை தீர்த்துக்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இந்த வட்டப்பாறை ஒரு சிறிய சந்நிதி. இதன் முன் பொய் சொல்வோர் மீளாத துன்பத்துக்கு ஆளாவர் என்று ஐதீகம் உண்டு.

கோவில் அமைப்பு
இறைவன் கோவிலும், இறைவி கோவிலும் தனித்தனியே சாலையின் இருபுறமும் எதிரெதிரே கோபுரங்களுடன் அமைந்துள்ளன. இறைவன் கோவில் கோபுரம் 7 நிலைகளுடன் கிழக்கு நோக்கி நல்ல சுற்று மதிலுடன் விளங்குகின்றது. அம்பாள் கோவில் கோபுரம் 5 நிலைகளுடன் மேற்கு நோக்கி உள்ளது. சுவாமி கோவில் ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால், எதிரே பெரிய சுதை நந்தி நம்மை வரவேற்கிறது. இறைவன் குடியிருக்கும் ஆலயம் இரண்டு பிராகாரங்கள் கொண்டது. அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின் சிலை வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. மேலும் வெளிப் பிராகாரத்தில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதியும், தனிக் கோயிலாக உள்ள சண்முகர் சந்நிதியும், ஈசான்ய லிங்கேஸ்வரர் சந்நிதியும் தரிசிக்கத்தக்கது.

வெளிப் பிராகார வலம் முடித்து சித்தி விநாயகர் சந்நிதி அருகே படிகள் ஏறி உள்பிராகாரத்தை அடையலாம். நேரே, தெற்கு நோக்கிய நடராச சபை உள்ளது. உள்பிராகாரச் சுற்றில் 63 மூவர், காலபைரவர், தேவகோஷ்டத்தில் சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், சிவபூஜை விநாயகர் ஆகியோரைக் காணலாம். கருவறை, அகழி அமைப்புடன் உள்ளது. மூலவர் வாயிலில் இருபுறங்களிலும் துவாரபாலகர் வண்ணச் சுதையில் உள்ளனர். அபிராமேஸ்வரர் என்றும், அழகியநாதர் என்றும் வழங்கும் இத்தலத்து இறைவன், ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததன் அடையாளமாக, சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறைபோல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். இரண்டாம் பிராகாரத்தில் ராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. மதங்க முனிவரால் உருவாக்கப்பெற்ற தீர்த்தம், ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இதில் நீராடாமல், நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

 

சாலையில் எதிரே உள்ள அம்பாள் கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், சிம்மம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலின் இருபுறமும் வண்ணச்சுதையால் அமைந்த துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் முத்தாம்பிகை மேற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். இந்த அம்பாள் ஒரு தீராத வரப்பிரசாதி. அம்பாள் சந்நிதிக்குள் நுழையும்போதே வலதுபுறம் மூலையில் வட்டப்பாறை சந்நிதி (அம்பாளின் சாந்நித்யரூபம்) உள்ளது. தற்போது இந்த சந்நிதியில் சிவலிங்கமே உள்ளது.

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தீராத சிக்கல்களை தீர்த்துவைக்கும் இத்தல இறைவனை ஒருமுறை சென்று வழிபடுங்கள்.

சுந்தரரின் தேவாரப் பாடல் - பாடியவர் திருவரங்கயயாதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com