வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பர் கோவில், கீழ்வேளூர்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 84-வது தலமாக இருப்பது கீழ்வேளூர் திருத்தலம்.

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 84-வது தலமாக இருப்பது கீழ்வேளூர் திருத்தலம். மானிடர்களின் கேடுகளைப் போக்கி, வினைகளை நீக்கி, துன்பமில்லா வாழ்வு தருபவர் இத்தல இறைவன் கேடிலியப்பர்.

     இறைவன் பெயர் : கேடிலியப்பர், அக்ஷய லிங்கேஸ்வரர்
     இறைவி பெயர் : வனமுலை நாயகி, சுந்தர குசாம்பிகை

இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் உள்ளன.

எப்படிப் போவது

திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் கீழ்வேளூர் தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன. நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோவில்,
கீவளூர் அஞ்சல்,
நாகப்பட்டினம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611 104.

இக்கோயில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

முன்பு தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து வட பத்ரிகாரண்யம் ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து, இலந்தைவனமாகி தென் பத்ரிகாரண்யம் ஆயிற்று. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். எனவேதான், இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத்தலம் தென் பத்ரிகாரண்யம் என்றும் அழைக்கப்பட்டது. இலந்தை மரமும் இத்தல விருட்சமாயிற்று.

ஸ்ரீ முருகப் பெருமான், தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், ‘பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில், சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, தவமிருந்து வழிபட்டால் இந்த தோஷம் நீங்கும்’ என்று கூறி அருளினார்.

அவரது அருளாணைப்படியே இத்தலத்துக்கு வந்த முருகப்பெருமான், தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில் கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்லமங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

பின்னர், சரவணப் பொய்கையில் நீராடி, கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள் முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த ஸ்வரூபியான ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருஉருவம் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன், நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு எந்தவிதமான கேடும் நேராமல் வராமல் காத்து நின்றார். எனவே ஸ்ரீஅஞ்சுவட்டத்தம்மன் என்ற திருநாமமும் இந்த அம்பிகைக்கு உண்டு. குமரன் தவக்கோலத்திலேயே இங்கு காட்சி தருகிறார்.

கோவில் அமைப்பு

சிலந்திச் சோழன் என்று பெயர் பெற்ற கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக்கோயில்களில் கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரிய கோயில். கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. கோபுரத்துக்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாகக் கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர், சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் மாடக் கோவிலில் காட்சி தருகிறார். ஆலயத்தின் கருவறை விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார்.
 

கட்டுமலை மீதுள்ள சந்நிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். அடுத்து சோமஸ்கந்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி, பதரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்கள் ஆகியோரையும் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயர் ஆகியோரையும் தரிசிக்கலாம். அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.

குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். முருகப்பெருமானின் பூசைக்கும் தவத்துக்கும் கெடுதி உண்டாகாதவாறு இறைவி சுந்தர குசாம்பிகை, துர்க்கையின் அம்சமாகக் காவல் புரிந்த அஞ்சுவட்டத்து அம்மையின் சந்நிதி முதல் பிராகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால், தனியே வட பக்கத்தில் இருக்கிறது.


இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (ஸ்ரீ சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது. காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இப்பெயர் திருநாவுக்கரசரின் "ஆளான அடியவர்க்கு அன்பன் தன்னை" என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டக பதிகத்துள் எடுத்தாளப்பட்டுள்ளது. பாடல்தோறும், கீழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது “மின் உலாவிய சடையினர்” என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில், "வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவை எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையவை.
 

கீழ்வேளூர் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்குள்ள முருகப்பெருமான், பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும்.
தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்துக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்

திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் "இத்தல இறைவனை வழிபடுவர்களின் பிணிகளும் வினைகளும் போகும், வழிபடுவோர் நிலைத்த பேரின்ப வாழ்வு மிகப் பெறுவர், ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும், இத்தல இறைவனை வழிபட்டால் நம்மை துன்பங்கள் அடையாது, ஞானசம்பந்தன் அருளிய இத்தல பதிகப் பாடல்களை ஓதுபவர் சிவகதி பெறுதல் உறுதி" என்றெல்லாம் குறிப்பிடுகிறார். அப்பர் பெருமான் இத்தல இறைவனை வழிபடுவர்களின் கேடுகள் எல்லாம் அழிந்து விடும் என்று தனது பதிகப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
 

கீழே இருப்பது திருநாவுக்கரசரின் கீழ்வேளூர் பதிகம்.
ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன் ஒப்பார் இல்லாதானைச்
சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்து ஒப்பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே.

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயினேனை
நன்னெறிக்கே செலும் வண்ணம் நல்கினானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
கிற்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை
ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
குளைவானை அல்லாதார்க் குளையா தானை
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

தாட்பாவு கமலமலர்த் தயங்குவானைத்
தலையறுத்து மாவிரதம் தரித்தான் தன்னைக்
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னைக்
கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

நல்லானை நரைவிடை ஒன்றூ ஊர்தியானை
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்றும் ஆனான் தன்னைத்
தொண்டாகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை
வில்லானை மெல்லியல் ஓர் பங்கன் தன்னை
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடினானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை
கிழித்தானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

உளரொளியை உள்ளத்தின் உனுள்ளே நின்ற
ஓங்காரத்துட் பொருள்தான் ஆயினானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை
வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்
கிளரொளியைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
தன்னடைந்த மாணிக்கு அன்று அருள்செய்தானை
உடுத்தானைப் புலி அதளோடு அக்கும் பாம்பும்
உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
வானவர்கள் கூடிய அத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை
மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு
பூண்டானைப் புறங்காட்டில் ஆடலானைப்
போகாது என் உள் புகுந்து இடங்கொண்டான் என்னை
ஆண்டானை அறிவரிய சிந்தையானை
அசங்கையனை அமரர்கள் தம் சங்கை எல்லாம்
கீண்டானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

முறிப்பான பேசிமலை யெடுத்தான் தானும்
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டினானைப்
பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானைப் புரமூன்றும் எரிசெய்தானைப்
பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே ...

சம்பந்தரின் பதிகம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

சம்பந்தரின் பதிகம் - பாடியவர் பாலச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com