சகல நோய்களும் நீங்கும் ஞானபுரீஸ்வரர் கோவில், திருஇடைச்சுரம்

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 26-வது தலமாக விளங்குவது திருஇடைச்சுரம்.
சகல நோய்களும் நீங்கும் ஞானபுரீஸ்வரர் கோவில், திருஇடைச்சுரம்

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 26-வது தலமாக விளங்குவது திருஇடைச்சுரம். இது தற்போது திருவடிசூலம் என்று மக்கள் வழக்கில் அறியப்படுகிறது.

    இறைவன் பெயர்: ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்
    இறைவி பெயர்: கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை
    இத்தலத்துக்கு திருஞானஞம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?
செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்,
திருவடிசூலம்,
செம்பாக்கம் – வழி,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603 108.

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.


கோவில் அமைப்பு

தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 27-வது தலமான திருஇடைச்சுரம் (திருவடிசூலம்), பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம் உள்ளது. கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால், விசாலமான தெற்கு வெளிப் பிராகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதியைக் காணலாம். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது, கிழக்குப் பிராகாரத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இப்பிராகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. அருகில் வேப்பம், அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். மேலும் இந்தக் கிழக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதியும் உள்ளது. பிராகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிராகாரம் வந்தால், தல விருட்சம் வில்வ மரம் உள்ளது. இந்த வில்வ மரத்துக்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது.
 

தெற்குப் பிராகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால், அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து நேரே தெற்கு நோக்கிய இறைவி கோவர்த்தனாம்பிகை சந்நிதியைக் காணலாம். சந்நிதிக்குள் நுழைந்தால், இடதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவன் ஞானபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரே இடத்தில் நின்றபடி இறைவன், இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சி அளிக்கின்றனர். கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. வலமாகச் சுற்றி வந்தால், முதலில் நால்வர் பிரதிஷ்டையும், அதையடுத்து விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து பைரவரும் காட்சி தருகிறார்..
 

இத்தலத்தின் சிறப்பு, மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது தீப ஒளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம் ஆதலால், இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது ஒரு சிறப்பம்சம்.

தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை பிரசாதமாக வாங்கி தினமும் உட்கொண்டு வந்தால், சகலவிதமான நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்துக்கு வரும் பக்தர்களில் பலர் தேன் அபிஷேக பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர். திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில், இத்தல பதிகத்தைப் பாராயணம் செய்து இறைவனை வழிபடுவர்கள் பிணிகள் இன்றி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.
 

தல வரலாறு
திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின்போது இவ்வழியே வந்துகொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட, ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள சம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய சம்பந்தரை பார்த்து, இடையன் அவர் யார் என்று வினவினான். தனது சிவஸ்தல யாத்திரை பற்றிக் கூறிய சம்பந்தரிடம், இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தர், அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்துவிட்டான். திகைப்படைந்த சம்பந்தர், சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு காட்சியளித்து, தானே இடையன் வடிவில் வந்து அருள்புரிந்ததைக் கூறினார். இடையனாக வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால், இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து சம்பந்தர் பதிகம் பாடினார். சிவன் மறைந்த குளக்கரை, காட்சிகுளம் என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.
 

இத்தலத்தில் சனத்குமார முனிவர் இறைவனை வழிபட்டு உபதேசம் பெற்றதால், சனத்குமாரபுரி என்றும், அம்பிகை பசு வடிவில் இறைவனை வழிபட்டதால் கோவர்த்தனபுரி என்றும் இத்தலம் பெயர் பெற்றிருந்தது. இடையனாக வந்து திருஞானசம்பந்தரை தடுத்து ஆட்கொண்டதால், சம்பந்தர் தனது பதிகத்தில் இடைச்சுரம் என்று பாடியுள்ளதால், அதன்பிறகு இத்தலம் திருஇடைச்சுரம் என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் இத்தலம் திருவடிசூலம் என்ற பெயரால் அறியப்படுகிறது.
 

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல இறைவனின் மரகதலிங்கத் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "இடைச்சுர மேவிய இவர்வண மென்னே" என்று பாடியுள்ளார்.

வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்து வெள்ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

பலஇலம் இடுபலி கையிலொன்று ஏற்பர்
பலபுகழ் அல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலை இலவங்கமும் ஏலமும் கமழும்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.

திருஇடைச்சுரம் தலம் பற்றிய சம்பந்தரின் பதிகம் - பாடியவர் சுந்தர் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com