எம பயம், செய்த பாவங்கள் நீங்கும் தலம் சக்ரவாகேஸ்வரர் கோவில், திருசக்கரப்பள்ளி

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 17-வது தலமாக இருப்பது திருசக்கரப்பள்ளி.
எம பயம், செய்த பாவங்கள் நீங்கும் தலம் சக்ரவாகேஸ்வரர் கோவில், திருசக்கரப்பள்ளி

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 17-வது தலமாக இருப்பது திருசக்கரப்பள்ளி. தற்போது அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது.

அய்யம்பேட்டை என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால், தஞ்சாவூருக்கு அருகிலுள்ள இத்தலத்தை தஞ்சாவூர் அய்யம்பேட்டை என்று அழைக்கிறார்கள்.

     இறைவன் பெயர்: சக்ரவாகேஸ்வரர்
     இறைவி பெயர்: தேவநாயகி
     இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

தஞ்சாவூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள அய்யம்பேட்டை என்ற ஊரில் நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது. சாலையில் திருக்கோயிலின் பெயர்ப் பலகை உள்ளது. ஊர்ப் பெயர் அய்யம்பேட்டை. கோயில் இருக்கும் பகுதி சக்கரப்பள்ளி என்று வழங்குகிறது. இத்தலம் சக்கரமங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆலய முகவரி
அருள்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோவில்
அய்யம்பேட்டை,
அய்யம்பேட்டை அஞ்சல்,
தஞ்சை மாவட்டம் – 614 201.

இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருச்சக்கரப்பள்ளி (சக்கரமங்கை) பாடல் பெற்ற தலம் என்பது மட்டுமின்றி, சப்தமங்கைத் தலங்கள் என்று போற்றப்படும் 7 தலங்களில் ஒரு தலம். சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தமங்கை தலங்கள் ஆகும். பிராமி வழிபட்ட தலம் சக்கரப்பள்ளி. மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்றதால், இத்தலம் திருசக்கரப்பள்ளி என்று பெயர் பெற்றது. ஒருமுறை, சாபத்தின் விளைவாக சக்கரவாகப் பறவையாக மாறிய பிரம்மா இத்தலம் வந்தார். ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதன் நீரால் இறைவனை வழிபட்டு தன் சுய உருவை திரும்பப் பெற்றார். சக்கரவாகப் பறவை வழிபட்டதால், இறைவன் சக்ரவாகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.


கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே சுதைச் சிற்பங்களாக ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்தபடி சிவன், பார்வதி, மற்றும் விநாயகர், முருகன் ஆகியோர் உள்ளனர். ஆலயத்தில் கொடிமரம் இல்லை. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும், பிராகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதி தனி கோவிலாக ஆலய வளாகத்தின் பின்புறம் அமைந்துள்ளது. மூலவர் கோவிலுக்குச் செல்லும் நுழைவாயிலிலும் மேலே சுதைச் சிற்பங்கள் உள்ளன. ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்துள்ள சிவன், பார்வதி, ஒருபுறம் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்துள்ள விநாயகர், மறுபுறம் மயில் வாகனத்தில் அமர்ந்துள்ள தண்டபாணி ஆகியோரைக் காணலாம்.


கருவறை மற்றும் விமானத்துடன் கூடிய மூலவர் சந்நிதி, தரைத்தளத்திலிருந்து சற்று தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறர். கருவறைச் சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிராகார வலம் வரும்போது விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறைக்கு முன் உள்ள மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர். தேவேந்திரன் குமாரனான ஜயந்தனும், தேவர்களும் இத்தல இறைவனை பூசித்துள்ளனர். சூரியன், சந்திரன் மற்றும் பைரவரின் சிலாரூபங்களும் காணப்படுகின்றன. மகா மண்டப வெளிச்சுவரில் புடைப்புச் சிற்பங்களாக சக்கரவாகப் பறவையும் பிராம்மியும் இறைவனைப் பூஜிக்கும் தல புராண நிகழ்ச்சி அழகுற வடிக்கப்பட்டுள்ளது.
 

இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்திலுள்ள முருகப் பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். முருகப்பெருமானின் முன்புறம் மயில் உள்ளது. திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
 


சண்டேஸ்வரருக்கு எதிரே காட்சி தரும் துர்க்கை, சிவ துர்க்கையாக காட்சி தருகிறாள். கையில் திரிசூலம் ஏந்தி அஷ்டபுஜங்கள் கொண்டு காட்சி அளிக்கும் இந்த துர்க்கையை வழிபடுவதன் மூலம், எமபயம் நீங்குவதோடு சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். அம்பாள் சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் தருவதும், எம பயம் நீக்கவல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது. பக்தர்கள் இந்தக் குண்டத்தில் குங்கிலயப் பொடி தூவி வழிபடுகின்றனர்.


சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல பதிகத்தை நாள்தோறும் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும் என்று திருஞானசம்பந்தர் தனது 11-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

1. படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப்பள்ளியே.

2. பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப்பள்ளியே.

3. மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந்
துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப்பள்ளியே.

4. நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப்பள்ளியே.

5. வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்
கந்தமார் மலரொடு காரகில் பன்மணி
சந்தினோ டணைபுனற் சக்கரப்பள்ளியே.

6. பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப்பள்ளியே.

7. பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப்பள்ளியே.

8. முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப்பள்ளியே.

9. துணிபடு கோவணஞ் சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவண னவனொடு மலர்மிசை யானையுந்
தணிவினர் வளநகர் சக்கரப்பள்ளியே.

10. உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்
தடம்புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே.

11. தண்வயல் புடையணி சக்கரப்பள்ளி எம்
கண்ணுதல் அவன் அடி கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவைசொலப் பறையும் மெய்ப் பாவமே.

சக்கரப்பள்ளி - சம்பந்தர் பதிகம் - பாடியவர் மயிலாடுறை சிவகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com