ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போன்ற தொல்லைகள் போக்கும் தலம் - திருப்புத்தூர்

பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 6-வது தலமாக விளங்குவது திருப்புத்தூர். இது, புகழ்பெற்ற பைரவர் தலமும் ஆகும். 
ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போன்ற தொல்லைகள் போக்கும் தலம் - திருப்புத்தூர்

பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 6-வது தலமாக விளங்குவது திருப்புத்தூர். இது, புகழ்பெற்ற பைரவர் தலமும் ஆகும். 

    இறைவன் பெயர்: திருத்தளிநாதர்
    இறைவி பெயர்: சிவகாமி, சௌந்தர்ய நாயகி
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

இந்த சிவஸ்தலம், காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்குப் பேருந்து வசதிகள் உண்டு. அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்குடி. 

ஆலய முகவரி
அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில்,
திருப்புத்தூர் அஞ்சல்,
சிவகங்கை மாவட்டம் – 623 211.

இந்த ஆலயம், காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு 
 

அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம், ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி, இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இத் தலம். அதனால்தான், திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. மேலும், வால்மீகி மகரிஷி இங்குவந்து புற்று வடிவில் தல விருட்சமான சரக்கொன்றை மரத்தின் அடியில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்தலத்துக்கு திருப்புத்தூர் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
 

சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு பிராகாரங்களுடனும், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உள்ள இத்தலத்தில், இறைவன் சுயம்பு லிங்கமாக திருத்தளிநாதர் என்று பெயருடன் எழுந்தருளியுள்ளார், அம்பாள் தனி சந்நிதியில் சிவகாமியம்மை என்று பெயருடன் காட்சி தருகிறாள். இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில், பைரவர் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் 2-வது பிராகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீ யோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார். உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகிறது. 

இங்குள்ள பைரவர், ஆதி பைரவர் என்றே அழைக்கப்படுகின்றார். 

பொதுவாக, பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால், இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகிறார். அதனால், யோக பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகிறது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். அதனால், அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப்பெற்று, அவருக்கு மிகவும் உகந்த சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. 


இவரது வழிபாட்டில் கலந்துகொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக்கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை. அர்த்தசாம வழிபாட்டுக்காக பூஜை மணி அடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர, அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்துவைப்பதும் உண்டு.

யோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது, நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத் திருத்தலத்தில், சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கை. இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், ஸ்ரீ யோக நாராயணர் சந்நிதி. ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிருகு முனிவரின் மனைவியைக் கொன்றதால் மகாவிஷ்ணு சாபம் பெற்று, அச்சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. 


கோயிலுள் உள்ள நடராஐரின் உருவமும், சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கவை. இங்கு நடராஐர், கெளரி தாண்டவ மூர்த்தியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்கள், இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பம்சம். இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறாள். ஸ்ரீ விநாயகரும், வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால், யோகத்துக்கும் தவத்துக்கும் இது ஒரு அற்புதமான திருத்தலமாக விளங்குகிறது. நவகிரகங்கள் இத்தலத்தில் அமர்ந்த நிலையில் இருப்பதைப் பார்க்கலாம்.

திருப்புகழ் தலம்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் 2-ம் பிராகாரத்தில், ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கோண்டு மயிலின் முன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

சிறப்புமிக்க இந்த பைரவர் ஆலயத்தை அவசியம் சென்று வழிபடுங்கள். வாழ்வில் எல்லா நலமும் பெறுவீர்கள்.

திருப்பத்தூர் - அப்பர் பதிகம் - திருவரங்கய்யாதி ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com