தீராத நோயையும் நீக்கும் திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 6-வது தலமாக இருப்பது திருமயேந்திரப்பள்ளி.
தீராத நோயையும் நீக்கும் திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 6-வது தலமாக இருப்பது திருமயேந்திரப்பள்ளி. கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ள இந்திர தீர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவோர், தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம்.

இறைவன் பெயர்: திருமேனியழகர்

இறைவி பெயர்: வடிவாம்பிகை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

எப்படிப் போவது

சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக நல்லூர் - முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம். அருகில் உள்ள மற்றொரு சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்), 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன. மகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில்
மயேந்திரப்பள்ளி, மயேந்திரப்பள்ளி அஞ்சல்,
ஆச்சாள்புரம் வழி, சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் - 609 101.

இவ்வாலயம், தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

இவ்வாலயம் கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் கொள்ளிடம் கடலில் கலக்கிறது. இந்திரன் (மகேந்திரன்) வழிபட்டதால் இத்தலத்துக்கு மகேந்திரப்பள்ளி என்று பெயர். திருமேனியழகர் ஆலயம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளை உடைய சிறிய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோவில் எதிரே மயேந்திர தீர்த்தம் உள்ளது. 

ராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிராகாரம் வலம் வந்தால் விநாயகர், காசிவிசுவநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். பிராகார வலம் முடித்து, அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால், வலதுபுறத்தில் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் உள்ளே சென்றால், வலதுபுறம் உள்ள நடராச சபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சி தருகின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். 

பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஆலயத்தில் நவக்கிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். இத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். இதை சம்பந்தரின் பதிகத்திலுள்ள 6-வது பாடலிலுள்ள ‘சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட’ என்னும் பதிக அடிகள் புலப்படுத்தும். 

ஆலயத்தின் தீர்த்தம் இந்திர தீர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது. இந்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவோர், தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். 

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

மகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்துக்கு மிக அருகில் விஜய கோதண்டராமர் கோவில் உள்ளது. வில்லேந்திய ராமரின் திருவுருவம் காணத்தக்கது. இதன் அருகில் திரெளபதி அம்மன் கோவிலும் உள்ளது. திருமேனி அழகரை தரிசித்த பின்பு, அவசியம் இவ்விரு கோவில்களையும் தரிசியுங்கள்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடியிணை பணிமினே. 

கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே. 

கோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந்
தாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே. 

வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே. 

நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே. 

சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே. 

சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே. 

சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்
கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே. 

நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.

உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்
படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை ஈசனை இணையடி பணிமினே. 

வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பர மிதுவென நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே. 

திருஞானசம்பந்தர் இத்தலப் பதிகத்தில், மயேந்திரப்பள்ளியின் இயற்கை வளங்களை சிறப்பித்துக் குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைய மயேந்திரப்பள்ளி இவ்வாறு உள்ளதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கடலலைகள் அடித்துவரும் பவளங்களும், சிறப்புடைய வைரமும், கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும், கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்றும், 

மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும், அழகிய மாளிகைகளும், நீர்முள்ளியும், தாழையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய திருமயேந்திரப் பள்ளி என்றும், 

கோங்கு, வேங்கை, செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்,

வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்களுக்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும், அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்றபோது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப்பள்ளி என்றும்,

இறைவனை வழிபட மலர்களைக் கையால் ஏந்தி வருவதுபோல, பல முத்துக் குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கும் திருமயேந்திரப்பள்ளி என்றும் இத்தலத்தை தனது பதிகப் பாடல்களில் சம்பந்தர் வர்ணிக்கிறார்.

நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப்பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின் வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை, இது நம்முடைய கடமை என்ற உறுதியுடன் நாவினால் பாடித் துதிப்பவர்கள், தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த இடத்தினை அடைவார்கள் என்று தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் குறிப்பிடுகிறார்.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com