41. பிறவாதே தோன்றிய பெம்மான் - பாடல் 2 

பிரளய காலத்திலும் அழியாமல் நின்ற

பாடல் 2

பின்றானும் முன்றானும் ஆனான் தன்னைப் பித்தற்குப்
                                                  பித்தனாய் நின்றான் தன்னை
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானேயாகி நல்வினையும்                                               
                                                   தீவினையும் ஆனான் தன்னைச்    
சென்று ஓங்கி விண்ணளவும் தீயானானைத் திருப்புன்கூர்
                                                                     மேவிய சிவலோகனை
நின்றாய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான்
                                                                              நினையாவாறே

விளக்கம்

பித்தற்குப் பித்தன் = தன்னிடம் பித்து கொண்டது போன்று பக்தி கொண்ட அடியார்களுக்கு அளவின்றி கருணை புரிந்து பித்தனைப் போல் நடந்துகொள்பவன். வேறு எந்தப் பொருளையும் விரும்பாமல் ஒரே பொருளை விரும்பும் தன்மை, பித்தினை ஒத்து இருப்பதால், வேறு எந்த தெய்வத்தையும் விரும்பாமல் சிவபிரானை விரும்புவர்களை பித்தர் என்று அப்பர் பிரான் அழைக்கிறார். அவ்வாறு வழிபடும் அடியவர்களை தானும் அதுபோல சிவபிரான் விரும்புவதால், சிவபிரானை பித்தர்க்கு பித்தர் என்று அப்பர் பிரான் அழைப்பதை இந்த பாடலில் காணலாம். பித்தற்குப் பித்தன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது நமக்கு, ஞான சம்பந்தரின் துருத்தி பதிகத்தின் ஒரு பாடலை (2.98.10) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் பெருமானை பித்தர் பித்தன் என்று சம்பந்தர் கூறுகின்றார். தம்பால் அளவின்றி பற்று கொண்டுள்ள அடியார்களின் மீது இறைவனும் அதே போன்று அளவின்று பற்று கொண்டவனாக உள்ள நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.

புத்தர் தத்துவம் இலாச் சமண் உரைத்த பொய் தனை
உத்தமம் எனக் கொளாது உகந்து எழுந்து வண்டினம்
துத்த நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம்
பித்தர் பித்தனைத் தொழப் பிறப்பு அறுத்தல் பெற்றியே

தனது அடியார்களுக்கு அருள்புரியும் தன்மையில் பித்தர் போன்றவர் சிவபெருமான் என்று திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை) முதல் பாடலில் சேந்தனார் கூறுகின்றார். பெருமானுக்கு ஆட்படாதவர்களை வஞ்சகர் என்று குறிப்பிடும் சேந்தனார் அத்தகைய வஞ்சகர் இல்லாத உலகம் வேண்டும் என்று கோருவது, உலகத்தவர் அனைவரும் சிவனது அடியார்களாக இருக்க வேண்டும் என்ற அவரது ஆசையினை வெளிப்படுத்துகின்றது. பிறப்பிறப்புச் சுழலிலிருந்து வெளிப்பட்டு வருவது என்பது எளிதான காரியம் அல்ல. நமது வினைத் தொகுதிகளை முழுவதுமாக அனுபவித்துத் தீர்த்துக்கொண்டால்தான், அந்த நிலையினை நாம் அடையமுடியும். ஆனால் சிவபெருமான் தனது அடியார்களின் மீது கருணை கொண்டு, அனுபவித்துத் தீர்க்காமல் பெருமானை வழிபாட்டு வினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வழி வகுத்திருப்பதால், அடியார்களுக்கு அருள்புரியும் தன்மையில் பெருமானை பித்தர் என்று சேந்தனார் இந்த பாடலில் கூறுகின்றார்.


மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய்
                                                                                       அகலப்
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி
                                                                         எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமை கோன் அடியோமுக்கு
                                                                                      அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்க்குப் பல்லாண்டு
                                                                                              கூறுதுமே

இறைவனை வணங்கும் தன்மையில் பித்தர்போல் நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் ஞான சம்பந்தரின் பாடல் (3.22.9) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பெருமானது பெயரினை நாள்தோறும் பித்தர்கள் போன்று பிதற்றும் பக்தர்களுக்கு ஆர்வமாக விளங்குவது பஞ்சாக்கர மந்திரம் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.

கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்
சீர் வணச் சேவடி செவ்வி நாள் தொறும்
பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே

அப்பர் பிரான், ஆவடுதுறை பதிகத்தின் ஒரு பாடலில் (6.46.4) பித்தராம் அடியார்க்கு முக்தி நெறி காட்டும் ஏணி என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இறைவன் பால் பெரும்பற்று கொண்டு பித்தர்போல் இருக்கும் அடியார்கள் பெறுகின்ற பேறு எத்தகையது என்பது இந்த பாடலில் உணர்த்துப்படுகின்றது. பித்தர் போன்று தன்பால் விருப்பம் கொண்டுள்ள அடியார்களை முக்தி உலகுக்கு அழைத்துச் செல்லும் ஏணியாகவும், துன்பக் கடலில் அகப்பட்டு சுழலில் தடுமாறும் தனக்குத் தோணியாகவும் செயல்படும் பெருமான் ஆணிப் பொன்னாக உள்ளான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பேணிய நற்பிறை தவழ் செஞ்சடையினானைப் பித்தராம்
                                                                 அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு
                                   இளைக்கின்றேற்கு அக்கரைக்கு ஏற வாங்கும்
தோணியைத் தொண்டனேன் தூயச் சோதிச் சுலா
                                         வெண்குழையானைச் சுடர் பொற்காசின்
ஆணியை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி
                                                    நாயேன் அடைந்து உய்ந்தேனே    

சுந்தரர் முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (7.43.11) பித்தனை ஒத்த தான் பிதற்றிய பாடல்கள் என்று கூறுவதை நாம் காணலாம். பெருமானிடத்தில் தான் கொண்டிருந்த மிகுதியான அன்பினால் பித்தர் போன்று தான் பிதற்றுவதாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களைப் பாடும் ஞானிகள், தடுமாற்றம் ஏதும் இல்லாது பெருமானைத் தொழும் அடியார்கள், அனைத்து வகையான தவத்தில் ஈடுபடுவோர் ஆகிய அனைவரும் துன்பம் நீங்கி இன்பம் அடைவார்கள் என்று கூறுகின்றார்.

முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரைப்
பித்தன் ஒப்பான் அடித் தொண்டன் ஊரன் பிதற்றிவை
தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்று இலார்
எத்தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே

தன்னை மற்றவர்கள் பித்தன் என்று அழைக்கும்படி மாற்றியவன் சிவபெருமான் என்று திருவாசகம் கண்டப்பத்து பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர் கூறுகின்றார் இறைவனிடம் நாம் கொண்டுள்ள அன்பு வளர்வதற்குத் தடையாக இருக்கும் உலகப் பொருட்களின் மீது உள்ள பாசத்தைக் களைந்து, தனது திருவடிகளுடன் எனது மனம் பிரியாது இருக்குமாறு கட்டுவித்த இறைவன் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார். தான் அடைந்துள்ள பேறு எத்தகையது என்பதை புரிந்துகொள்ளாத உலகத்தவர் தன்னைப் பித்தன் என்று கூறுவதாக மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன் இவன் என என்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே

முன்றானும் = அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவன்: பின்றானும் = அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் நிலைத்து நிற்பவன்; இவ்வாறு அப்பர் பெருமான் இறைவனைக் குறிப்பிடுவது திருவாசகம் திருவெம்பாவை பாடலினை நினைவூட்டுகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தோன்றிய பொருட்களுக்கும் பழமையாக விளங்கும் இறைவனே, வரும் காலத்தில் புதுமையாக தோன்றவிருக்கும் பொருட்களையும் கடந்து நிற்கும் தன்மை படைத்தவனே என்று இறைவனை மணிவாசகர் இந்த பாடலில் அழைக்கின்றார். பாவை நோன்பு நோற்கும் பெண்கள் பாடுவதாக அமைந்த இந்த பாடலில், சிவபெருமானது அடியார் தங்களது கணவராக வாய்த்தால், அவரது வழிகாட்டுதலில் அவருக்கு அடிமையாக, மிகவும் மகிழ்ந்து அவர் சொல்லும் பணிகளைச் செய்வோம் என்றும் தங்களது வாழ்வில் எந்த குறையும் இருக்காது என்றும் கூறுவதாக அமைந்த பாடல். முன்றானும் பின்றானும் ஆனான் என்பதற்கு இறந்த காலமாகவும் எதிர் காலமாகவும் இருப்பவன் சிவபெருமான் என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றனர்.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய்

பிரளய காலத்திலும் அழியாமல் நின்ற பல தலங்களுள் ஒன்றாக நீடூர் கருதப்படுகின்றது. நீண்டு நின்ற ஊர் என்பதை உணர்த்தும் வண்ணம் நீடூர் என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். அப்பர் பிரான் இந்த பாடலில் நின்றாய நீடூர் என்று தலத்தின் பெருமையை, பிரளயத்தையும் கடந்து நின்ற தன்மையை உணர்த்துகின்றார்.

பொழிப்புரை

உலகத்தில் தோன்றிய அனைத்து பொருட்களுக்கும் உயிர்களுக்கும் பழமையானவனும், இனி தோன்றவிருக்கும் பொருட்களுக்கும் உயிர்களுக்கும், அவைகளைக் கடந்து நிற்பதால் புதியவனாக இருப்பவனும் சிவபெருமான் தான். தன்னிடம் பெருவிருப்பு கொண்டு வழிபடும் அடியார்களின் மீது அளவு கடந்து அன்பு கொண்டவனாகத் திகழ்பவனும், தனது நிலையினை நன்றாக உணர்ந்த மெய்யடியார்களுக்கு அவர்கள் பற்றிக்கொள்ளும் உறுதிப் பொருளாக இருப்பவனும், உயிர்கள் சென்ற பிறவிகளில் ஈட்டிய வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை வழங்குபவனும், திருமாலும் பிரமனும் காணாத வண்ணம் விண்ணளவும் ஓங்கி தீப்பிழம்பாய் நின்றவனும், திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும், ஊழிக் காலத்தையும் தாண்டி நிற்கும் தன்மையை உடைய நீடூர் தலத்தில் நிலையாக பொருந்தியவனும் ஆகிய பெருமானை, கீழ்க்குணம் கொண்ட நான் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com