ஏறேறி ஏழுலகு ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும்
இறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார்
அங்கை அனலும் உண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய்
அரவும் ஆர்த்தார்
பாறேறு வெண் தலையார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
பந்தணைநல்லூராரே
விளக்கம்
நீலம் = பெருமானின் கழுத்தினில் நீலநிறத்தை உண்டாக்கிய விடம். நெருப்பு = நெருப்பினில் இடப்படும் அவிர்பாகம். பாறு = பருந்து.
பொழிப்புரை
ஏழுலகும் புகழும் வண்ணம், எருதின் மீதேறி எங்கும் திரியும் பெருமானை, தேவர்கள் எப்பொழுதும் வேண்டி வழிபடுகின்றார்கள். நீறணிந்த மேனியராக காணப்படும் பெருமான், தனது கழுத்தினில் விடத்தை அடைத்து வைத்ததால் நீல நிறமாக மாறிய கழுத்தினை உடையவர் ஆவார். வேள்விகளில் அளிக்கப்படும் அவிர்பாகத்தை விரும்பி ஏற்கும் பெருமான், தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு நடமாடுகின்றார். கங்கை ஆற்றினைத் தனது சடையில் ஏற்றுக்கொண்ட பெருமான், பசுவிலிருந்து பெறப்படும், பால் தயிர் நெய் கோமியம் மற்றும் கோசலம் ஐந்து பொருட்களையும் கொண்டு அடியார்கள் நீராட்ட, அதனை மிகவும் உகந்து ஏற்கின்றார். நெருப்பு போன்ற கொடிய விடத்தை கக்கும் ஐந்து தலைகள் கொண்ட நாகத்தினைத் தனது இடையில் இறுகக் கட்டி சுற்றிய பெருமான், புலால் நாற்றம் வீசுவதால் பருந்துகள் சுற்றித் திரியும் பிரமனின் மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவாறு. பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்று, பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.