பணம் கொள் பாற்கடல் பாம்பணையானொடும்
மணம் கமழ் மலர்த் தாமரை ஆனவன்
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்
கணங்கள் போற்றி இசைக்கும் கரக் கோயிலே
விளக்கம்
பணம் கொள் பாம்பு = படமெடுத்து ஆடும் பாம்பு. அணையான் = படுக்கையாகக் கொண்டவன். பிணங்கும் = தம்மில் மாறுபட்டபோது, பிரமனும் திருமாலும், தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று ஒருவொருக்கு ஒருவர் வாதம் செய்த நிலையை உணர்த்துகின்றது.
பொழிப்புரை
படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது படுக்கையாகக் கொண்டு பாற்கடலில் படுத்திருக்கும் திருமாலும் நறுமணம் கமழும் மலராகிய தாமரை மலரில் உறையும் பிரமனும், தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று கடுமையான வாதத்தினை மேற்கொண்டபோது, அவர்களின் முன்னே நீண்ட பேரழலாய் நிமிர்ந்து நின்றவன், எமது பெருமானாகிய சிவபெருமான். அவன் வீற்றிக்கும் இடம், கணங்கள் போற்றி இசைப் பாடல்கள் பாடும் கடம்பூர் கரக் கோயிலாகும்.